இலங்கை கடற்படையால் ஒரே நாளில் 28 ராமேஸ்வரம் மீனவர்கள் சிறைபிடிப்பு!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 28 பேரை அடுத்தடுத்து இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் இலங்கை எல்லை பகுதியில் மீன்பிடித்து வருகின்றனர். அவ்வாறு மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக கூறி கைது செய்கின்றனர். அவ்வப்போது இலங்கை கடற்கொள்ளையர்களும் தமிழக மீனவர்களை தாக்கி அவர்களின் வலைகள், மீன்கள், ஜிபிஎஸ் கருவிகள் உள்ளிட்டவற்றை பறித்துச் சென்று அட்டூழியத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் நேற்று காலை 500க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்கக் கடலுக்குச் சென்றனர். அவர்களில் கச்சத்தீவு – தனுஷ்கோடி இடையே இரு படகுகளில் 16 மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு ரோந்து படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன் பிடிக்கவிடாமல் தாக்கியுள்ளனர். தொடர்ந்து எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து அவர்களை இலங்கை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். ராமேஸ்வரம் மீனவர்களின் 2 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

இதேபோல, இன்று அதிகாலை கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களின் மேலும் மூன்று படகுகளை முற்றுகையிட்ட இலங்கை கடற்படையினர் அந்த படகுகளையும் அதிலிருந்து 12 மீனவர்களையும் தாக்கியதோடு 12 மீனவர்களையும் சிறை பிடித்து இலங்கைக்கு கொண்டு சென்றனர். ஒரே நாளில் ராமேஸ்வரம் மீனவர்கள் 28 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றுள்ளது அப்பகுதி மீனவர்களிடையே மிக பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.