நெல்லை கல்குவாரியில் சிக்கிய மேலும் ஒரு வாலிபர் உடல் மீட்பு!

நெல்லை கல்குவாரியில் சிக்கிய மேலும் ஒரு வாலிபரின் உடல் நேற்று மீட்கப்பட்டது.

நெல்லை அடைமிதிப்பான்குளம் பகுதியில் உள்ள கல்குவாரியில் கடந்த 14-ந் தேதி ராட்சத பாறைகள் சரிந்து விழுந்தன. அப்போது அங்கு பணியில் இருந்த நாங்குநேரி அருகே காக்கைகுளம் பகுதியை சேர்ந்த செல்வகுமார் (வயது 30), தச்சநல்லூர் ஊருடையான்குடியிருப்பை சேர்ந்த ராஜேந்திரன் (35) இளையநயினார்குளத்தைச் சேர்ந்த செல்வம் (27), விட்டிலாபுரத்தைச் சேர்ந்த முருகன் (40), நாட்டார்குளம் பகுதியைச் சேர்ந்த விஜய் (27), ஆயன்குளத்தைச் சேர்ந்த மற்றொரு முருகன் (23) ஆகிய 6 பேர் பாறை இடிபாடுகளுக்குள் சிக்கினர். இதில் முருகன், விஜய் ஆகியோர் உயிருடன் மீட்கப்பட்டனர். செல்வம், ஆயன்குளம் முருகன், செல்வகுமார் ஆகியோர் உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன.

பாறை இடிபாடுகளில் சிக்கியிருந்த கடைசி நபரான ராஜேந்திரனை தேடும் பணியில் மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். பாறைகளை வெடிவைத்து தகர்த்து, அங்கு குவிந்து கிடந்த கற்களை அப்புறப்படுத்தினர். இந்த நிலையில் நேற்று 9-வது நாளாக மீட்பு பணி நடைபெற்றது. கல்குவாரியில் தேங்கியிருந்த தண்ணீரை வெளியேற்றினர். தொடர்ந்து அங்கிருந்த பாறைகளுக்கு வெடி வைத்து வெடிக்க செய்தனர். மதியம் 1.40 மணியளவில் பயங்கர சத்தத்துடன் பாறைகள் வெடித்து சிதறின. தொடர்ந்து கற்குவியலை அகற்றும் பணி துரிதமாக நடைபெற்றது. கற்குவியலின் அடியில் சிக்கியிருந்த லாரிக்குள் டிரைவரின் இருக்கையில் ராஜேந்திரன் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து நவீன எந்திரங்கள் மூலம் லாரியை வெட்டினர். தொடர்ந்து இரவு 9 மணியளவில் ராஜேந்திரனின் உடலை பேரிடர் மீட்பு குழுவினர் மீட்டு மேலே கொண்டு வந்தனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கல்குவாரி விபத்தில் சிக்கிய கடைசி நபரின் உடலும் மீட்கப்பட்டதை தொடர்ந்து 9 நாட்களாக நடந்த மீட்பு பணி நிறைவு பெற்றது.

இந்நிலையில் 5-வது நபராக நாங்குநேரி அருகே உள்ள காக்கைகுளத்தை சேர்ந்த லாரி டிரைவர் செல்வகுமார் உடல் கடும் சிரமத்துக்கு பின்னர் கடந்த 18-ந்தேதி மீட்கப்பட்டது. அவரது உடல் ஐகிரவுண்டு அரசு மருத்துவக்கல்லூரி பிரேத கிடங்கில் வைக்கப்பட்டிருந்தது. உடலை உறவினர்கள் வாங்க மறுத்து காலதாமதம் ஆகிய நிலையில் நேற்று செல்வகுமார் உறவினர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். கலெக்டர் விஷ்ணுவை சந்தித்து, செல்வகுமார் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என கலெக்டர் உறுதி அளித்தார். இதையடுத்து உறவினர்கள் செல்வகுமார் உடலை வாங்க சம்மதித்தனர். இதையடுத்து செல்வகுமார் உடல் 4 நாட்களுக்கு பின் நேற்று அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. முன்னதாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி ரூ.15 லட்சம் நிவாரண தொகைக்கான காசோலையை கலெக்டர் விஷ்ணு, செல்வகுமாரின் தந்தை மணியிடம் வழங்கினார்.