எடப்பாடி மீதான ரூ.4800 கோடி டெண்டர் முறைகேடு வழக்கு நவம்பர் 29ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

எடப்பாடி பழனிசாமி மீதான ரூ.4800 கோடி டெண்டர் முறைகேடு விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு நவம்பர் 29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் நெடுஞ்சாலைத் துறையில் டெண்டர் கோரியதில் ரூ.4,800 கோடி அளவிற்கு முறைகேடு நடந்துள்ளதாக கூறி, முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக அளித்த புகார் மீது சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரிக்க உத்தரவிடக் கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் 2018ம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார். இதையடுத்து வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆரம்ப கட்ட விசாரணையில் முறைகேடு நடைபெற்றதற்கான முகாந்திரம் இல்லை என லஞ்ச ஒழிப்பு துறை அறிக்கை அளித்தும், இந்த முறைகேடு புகார் குறித்து சிபிஐ விசாரணை நடத்தும்படி, 2018ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீடு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ததுடன், இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் விசாரித்து முடிவெடுக்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து மேற்கண்ட உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் படி வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஜூலை மாதம் தீர்ப்பளித்தது சென்னை உயர்நீதிமன்றம். எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான ஆர்.எஸ். பாரதியின் மனுவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் டிஸ்மிஸ் செய்தார். இந்த விவகாரத்தில் கடந்த 2018ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையில் குறை காண முடியாது. மேலும் ஆட்சி மாற்றம் காரணமாக மீண்டும் புதிதாக விசாரணை நடத்த தேவையில்லை என்றும், அதேபோன்று சிறப்பு புலனாய்வு விசாரணை கோரிய ஆர்.எஸ்.பாரதி மனு தள்ளுபடி செய்யப்படுகிறது எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து எடப்பாடி பழனிசாமி மீதான ரூ.4.800 கோடி டெண்டர் முறைகேடு விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் நிகழ்ந்த முறைகேடு விவகாரங்களை உரிய வகையில் ஆராயாமல் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் அந்த உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அனிருத்தா போஸ், பீலா எம்.திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது லஞ்ச ஒழிப்புதுறை சார்பில் கபில் சிபல் ஆஜரானார்.. இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கபில் சிபல் நான் வேண்டுமானால் விலகி கொள்கிறேன் என்றார்.

இந்நிலையில் இந்த வழக்கை நீதிபதிகள் ஒரு வார காலத்திற்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர். இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் கடந்த செப்டம்பர் 25ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது லஞ்சஒழிப்புதுறை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் தவே, எதிர்க்கட்சிகள் வழக்கை சந்திப்பது என்பது நாடு முழுவதும் நடந்து வரக்கூடிய ஒன்று தான். ஆளுங்கட்சியாக இருந்து எதிர்க்கட்சியாக மாறியதற்கு பிறகு அவர்கள் ஆளும் போது என்னென்ன முறைகேடுகளில் ஈடுபட்டார்கள் என்பதை அலசி ஆராய்வது என்பது புதிதாக ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்களின் அடிப்படை கடமையாக உள்ளது. அதன் அடிப்படையிலேயே எடப்பாடி பழனிசாமி மீது விசாரணையை தொடங்கியுள்ளோம் என வாதிட்டார்.

இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அப்போது குறுக்கீட்ட நீதிபதிகள், நீதிமன்றத்தில் இருந்து அரசியல் விவகாரங்களை தள்ளி வையுங்கள் என அறிவுறுத்தினார்கள். மேலும் நாடு முழுவதும் எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரும் வழக்குகளை எதிர்கொள்கிறார்கள் என்றும் ஆளுங்கட்சியினர் யாரும் வழக்குகளை சந்திப்பதில்லை என கருத்து தெரிவித்த நீதிபதிகள். வழக்கின் விசாரணையை அக்டோபர் 17-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். புகார்தாரார்கள் உள்ளிட்ட மற்ற தரப்பினருக்கு வழக்கின் விவரங்களை பகிர்ந்துகொள்ள நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

இந்நிலையில் அக்டோபர் 17ம் தேதியான இன்று வழக்கு மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மேல்முறையீட்டு வழக்கை நவம்பர் 29ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். முன்னதாக உச்ச நீதிமன்றத்தில் வாதிட்ட லஞ்ச ஒழிப்பு துறை, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த காலத்தில் பல டெண்டர்கள் வழங்கப்பட்டுள்ளது. முந்தைய ஆட்சியில் முறையான விசாரணை நடைபெறவில்லை. இந்த வழக்கில் விரிவான நேர்மையான விசாரணை நடத்த வேண்டும் என்று வாதிடப்பட்டது.