அண்ணாமலையின் வண்டவாளங்கள் மொத்தமாக டிரங்க் பெட்டியில் ஏற்றப்படும்: சேகர்பாபு

அண்ணாமலையின் வண்டவாளங்கள் அனைத்தும் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் ட்ரெங்க் பெட்டியில் ஏற்றப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மாதாந்திர சீராய்வுக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

100 ஆண்டுகள் பழமையான கோவில்கள் தேர்வு செய்யப்பட்டு குடமுழுக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. எம்மதமும் சம்மதமே, அனைவரும் ஒன்றிணைந்து வாழ வேண்டும் என்ற நோக்கில் தான் செயல்பட்டு வருகிறோம். அனைத்து மக்களும் ஒன்றாக இருக்க வேண்டும். சிலர் மதத்தை வைத்து அரசியல் செய்கின்றனர்.

அண்ணாமலை ஆதாரப்பூர்வமாக இதுவரை என்ன குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்? திமுக அமைச்சர்களின் மீது அண்ணாமலை இரண்டாவது கட்ட ஃபைல் என்று கொடுத்த புகார் என்ன ஆனது? அதில் எங்காவது இதை இவர் கையூட்டாக பெற்றுள்ளார், சலுகை காட்டினார் என்று ஆதாரப்பூர்வமாக தெரிவித்துள்ளாரா? அண்ணாமலை பெட்டியைக் கொண்டு போய் கொடுத்தது மட்டும்தான் மிச்சம். அண்ணாமலையின் வண்டவாளங்கள் அனைத்தும் கூடிய விரைவில், அதாவது நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் ட்ரெங்க் பெட்டியில் ஏற்றப்படும். இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

முன்னதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை திருப்பூரில் மேற்கொண்ட பாதயாத்திரையின்போது பேசுகையில், “அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களுக்குச் சொந்தமான 2 லட்சம் ஏக்கர் நிலங்களைக் காணவில்லை. அதனால்தான், அறநிலையத்துறையை தமிழகத்தின் நம்பர் 1 திருடன் என்கிறோம். அறைநிலையத்துறையில் நம்பர் ஒன் திருடன் திமுக தான். காணாமல் போன சிலைகளில், ஒன்றைக்கூட தமிழ்நாடு அரசு மீட்கவில்லை. அதனால்தான், தமிழ்நாட்டில் இந்துக்களுக்கும், கோயில்களுக்கும் எதிரான ஆட்சி நடக்கிறது என்று தெலுங்கானாவில் பேசும்போது பிரதமர் மோடி சொன்னார். சனாதானத்தை அழிப்பேன் என்று உதயநிதி ஸ்டாலின் சொன்னால் 2024 ம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் வாக்குப்பட்டியலில் திமுக என்ற கட்சியை அழித்து விடுவார்கள்” என பேசியிருந்தார்.