ஸ்மிருதி இரானி சொன்ன வார்த்தை ரொம்ப வேதனையா இருக்கு: கனிமொழி எம்பி

உலகளாவிய பசி குறியீட்டில் இந்தியா 107 வது இடத்தில் இருந்து 111வது இடத்துக்கு சென்றது. இது விவாதத்தை கிளப்பி உள்ள நிலையில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறிய பதிலால் திமுக எம்பி கனிமொழி வேதனையடைந்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் உலக பசி குறியீடு பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. 2023 ஆம் ஆண்டுக்கான உலக பசி குறியீடு நாடுகளின் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் மொத்தம் 125 நாடுகள் இடம்பெற்றுள்ளது. இதில் இந்தியா 111வது இடத்தில் உள்ளது. அதாவது பசி குறியீடு பட்டியலில் இந்தியா என்பது மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. கடந்த முறை 107 வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 111வது இடத்துக்கு சரிந்துள்ளது. அதோடு பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் அண்டை நாடுகளான இலங்கை இந்த பட்டியலில் 60வது இடத்திலும், பாகிஸ்தான் 102வது இடத்திலும் உள்ளது. வங்கதேசம் கூட 81வது இடத்தில் இருக்கிறது. ஆனால் இந்தியா மிகவும் பின்தங்கி இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் உலக பட்டினிக் குறியீட்டை ஒன்றிய பா.ஜ.க அமைச்சர் ஸ்மிருதி இரானி கேலி செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தில் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பு (ஃபிக்கி) மாநாடு நேற்று நடந்தது. இதில் ஸ்மிருதி இரானி பங்கேற்றார். அப்போது அவரிடம் உலக பசி குறியீட்டில் இந்தியா பின்தங்கி இருப்பது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஸ்மிருதி இரானி, ‛‛உலக பசி குறியீடு எப்படி எடுக்கப்படுகின்றன. இந்தியாவில் 140 கோடி மக்களில் 3000 பேரிடம் தொலைபேசியில் அழைத்து உனக்கு பசிக்கிறதா? என கேட்டு பட்டினிக் குறியீடு நிர்ணயிக்கப்படுகிறது. டெல்லியிலிருந்து நான் காலை 4 மணிக்கு கிளம்பினேன். 5 மணிக்குக் கொச்சி விமானம் வந்தேன். பிறகு அங்கிருந்து விமானத்தில் பயணம் செய்து ஹைதராபாத் வந்தடைந்தேன். இப்படியான நேரங்களில் நான் உணவு சாப்பிட 10 மணிக்கு மேல் ஆகும். இந்த சமயத்தில் போன் செய்து உங்களுக்குப் பசிக்கிறதா? என்று கேட்டால் நான் பசிக்கிறது என்றுதான் சொல்வேன். இப்படிதான் பட்டினிக் குறியீடு தயாரிக்கப்படுகிறது. இதில் இந்தியாவை விட பாகிஸ்தான் முன்னிலையில் இருப்பதாக கூறுகிறது. இதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா?” என தெரிவித்தார்.

ஸ்மிருதி இரானியின் இந்த கருத்துக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தான் திமுக எம்பியான கனிமொழி ஸ்மிருதி இரானி பேசிய வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு விமர்சனம் செய்துள்ளார். அந்த பதிவில், ‛‛பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் உலகளாவிய பசி குறியீட்டின் தாக்கத்தைப் புரிந்து கொள்ளாமல் கேலி செய்வதை பார்ப்பது என்பது வேதனை அளிக்கிறது. ஊட்டச்சத்து குறைபாடு, போதிய உணவு விநியோகம் மற்றும் குழந்தைகள் இறப்பு ஆகியவற்றை நிவர்த்தி செய்வதில் பாஜக அரசாங்கத்தின் திறமை குறித்து இது கடும் கேள்விகளை எழுப்புகிறது” என சாடியுள்ளார்.