அரசியல் ஆதாயத்துக்காக ராமர் பெயரை எத்தனை தடவை சொல்வீர்கள்?: கபில்சிபல்

அரசியல் ஆதாயத்துக்காக ராமர் பெயரை எத்தனை தடவை பயன்படுத்துவீர்கள் என பா.ஜனதாவிடம் கபில்சிபல் கேள்வி எழுப்பியுள்ளார்.

டெல்லியில் நேற்று முன்தினம் தசரா விழா நடந்தது. அதில் பேசிய பிரதமர் மோடி, ”அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. அடுத்த ராமநவமியில் அங்கு செய்யப்படும் பிரார்த்தனை, உலகம் முழுவதும் மகிழ்ச்சியை உருவாக்கும்” என்று கூறினார்.

இந்நிலையில், இதுதொடர்பாக, முன்னாள் மத்திய மந்திரியும், மாநிலங்களவை சுயேச்சை எம்.பி.யுமான கபில்சிபல் கருத்து தெரிவித்துள்ளார். அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

பா.ஜனதாவின் கவனத்துக்கு. அரசியல் ஆதாயத்துக்காக ராமர் பெயர் எத்தனை தடவை பயன்படுத்துவீர்கள்? அதே சமயத்தில் ராமரின் குணநலன்களை ஏன் நீங்கள் கடைபிடிக்கவில்லை?. அவரது வீரம், தீரச்செயல், விசுவாசம், கருணை, அன்பு, கீழ்ப்படியும் தன்மை, துணிச்சல், சமத்துவம் ஆகிய பண்புகளில் எதையுமே உங்கள் ஆட்சி பின்பற்றவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.