ஒரு ரவுடிக்கும், நீட் தேர்வுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது: சசிகலா

ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்துக்கு சசிகலா கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.

இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் சசிகலா கூறியுள்ளதாவது:-

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையின் முன்பு கருக்கா வினோத் என்ற ரவுடி பெட்ரோல் குண்டு வீசியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது தமிழக ஆளுநரை அச்சுறுத்தும் வகையில் இருக்கிறது. இந்திய ஜனாதிபதி அவர்களும் நாளை இங்கு வர உள்ள நிலையில் ஏன் எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் கடைபிடிக்கப்படாமல் இருக்கிறது என்பது மிகவும் விந்தையாக இருக்கிறது. இதன் மூலம் தமிழக உளவுத்துறையும் முற்றிலும் தோல்வியடைந்து இருப்பதாகதான் தெரியவருகிறது. இது காவல்துறையை கையில் வைத்து இருக்கும் தமிழக முதல்வருக்கே வெளிச்சம்.

இன்றைக்கு தமிழ்நாட்டில் உள்ள ஆளுநருக்கே இந்த நிலைமை என்றால் சாமானிய மக்களின் பாதுகாப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தெரிகிறது. திமுக ஆட்சிக்கு வந்தபிறகு இது போன்ற சமூக விரோத செயல்கள் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தமிழகத்தின் பொது அமைதிக்கும் குந்தகம் ஏற்படுவத்துவதாக இருக்கிறது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் சட்டம் ஒழுங்கு காற்றில் பறப்பதை தமிழக மக்கள் கண்கூடாக பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி வினோத் கடந்த ஆண்டு பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசி கைது செய்யப்பட்டவர் என தெரியவருகிறது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாகத்தான் ஜாமினில் வெளியே வந்து இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த ரவுடி, நீட் தேர்வுக்கு விலக்கு வேண்டும் என்று காவல்துறையினரிடம் வாக்குமூலம் கொடுத்து இருப்பதாக செய்திகள் வருகின்றன. ஒரு ரவுடிக்கும், நீட் தேர்வுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்று புரியவில்லை. இந்த ரவுடியை பின்னால் இருந்து யாரும் இயக்குகிறார்களா? என்ற கேள்வியும் தற்போது அனைவருக்கும் எழுகிறது.

நீட் தேர்வு ஏன் ரத்து செய்யப்படவில்லை? என்று நியாயமாக கேள்வி கேட்கப்பட வேண்டியவர்கள் திமுகவினர்தான். திமுகவினர் பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி ஆட்சியில் அமர்ந்து கொண்டு தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் பெரும் துரோகத்தை இழைத்து விட்டனர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பொறுப்பில் உள்ள அமைச்சர்கள் முதல் மக்கள் பிரதிநிதிகள் அனைவருமே வன்மத்தை வளர்க்கும் விதமாக பொது வெளிகளில் பேசி வருவது மிகவும் கண்டனத்திற்குரியது. இது போன்ற செயல்பாடுகளே சட்டம் ஒழுங்கு சீர்குலைய முக்கிய காரணமாக அமைந்துவிடுவதாக பொதுமக்கள் கருதுகின்றனர். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சியில் இது போன்று ஏதாவது நடந்ததுண்டா? அம்மா அவர்கள் தலைமையிலான ஆட்சிக்கும், திமுக தலைமையிலான ஆட்சிக்கும் உள்ள வேறுபாடு என்ன? என்பதை தமிழக மக்கள் இன்றைக்கு நன்கு புரிந்து கொண்டுவிட்டனர். மக்களின் மீது உண்மையான அக்கறை கொண்டவர் யார்? தமிழகத்தை அமைதி பூங்காவாக வைத்திருந்தவர் யார்? என்பது தமிழகத்தில் கடைக்கோடியில் இருப்பவர்களும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் இன்றைக்கு திமுக தலைமையிலான அரசின் மக்கள் விரோத செயல்பாடுகள் அமைந்துவிட்டது. திமுகவினர் போட்ட வேஷம் நாளுக்கு நாள் கலைந்து கொண்டே வருவதை தமிழக மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

எனவே, திமுக தலைமையிலான அரசு வாக்களித்த மக்கள் தமிழகத்தில் நிம்மதியாக வாழ்ந்திடும் வகையில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தமிழகத்தில் நாள்தோறும் நடக்கும் சமூக விரோத செயல்களை கண்டும் காணாமல் இருப்பதை விட்டுவிட்டு, அவற்றை இரும்பு கரம் கொண்டு கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து, சட்டம் ஒழுங்கு பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும் என திமுக தலைமையிலான விளம்பர அரசைக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.