எல்லையில் பாகிஸ்தான் திடீர் தாக்குதல்: இந்தியா தக்க பதிலடி!

எல்லையில் பாகிஸ்தான் நடத்திய திடீர் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.

பாகிஸ்தானுடனான சர்வதேச எல்லைப்பகுதியில் இந்திய எல்லைப்பாதுகாப்புப்படையினர் தீவிர பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைய முயற்சிக்கும் பயங்கரவாதிகளை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஜம்முவின் அரினா செக்டார் பகுதியில் சர்வதேச எல்லையில் இந்திய எல்லைப்பாதுகாப்புப்படையினர் நேற்று வழக்கமான பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது, எல்லையில் உள்ள இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியது. நேற்று இரவு 8 மணியளவில் துப்பாக்கிச்சூடு மற்றும் சிறிய ரக பீரங்கிகளை வீசி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு இந்தியா பதிலடி தாக்குதல் நடத்தியது. இதனால், எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய இந்த தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் படுகாயமடைந்தார். அவர் ஜம்முவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் திடீர் தாக்குதல் நடத்திய நிலையில் தாக்குதலுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளதால் எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற 5 பாகிஸ்தான் தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். ஜம்மு காஷ்மீரின் குப்வாரா எல்லையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவ காத்திருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து குப்வாரா மாவட்டம் மச்சில் செக்டார் எல்லை பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
இந்த நடவடிக்கையின் போது எல்லையில் ஊடுருவ பதுங்கியிருந்த தீவிரவாதிகள் நடமாட்டத்தை கண்காணித்த பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனையடுத்து பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த படியே பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தினர். இருதரப்புக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை பல மணிநேரம் நீடித்தது. எல்லையில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகள் மீதான இத்தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர்.