மராத்தா இடஒதுக்கீடு போராட்டம்: 3 எம்எல்ஏக்கள் ராஜினாமா!

மராத்தா ஜாதியினருக்கு இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் கீழ் இடஒதுக்கீடு வழங்க கோரி செயற்பாட்டாளர் மனோஜ் ஜாரங்கே மேற்கொண்டு வரும் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் தொடருகிறது. இதனையடுத்து இன்று மாநிலத்தில் அனைத்து கட்சிக் கூட்டத்தை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூட்டியுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் மராத்தா ஜாதியினர் இடஒதுக்கீடு கோரி நீண்டகாலம் போராடி வருகின்றனர். 2018-ம் ஆண்டில் மராத்தா இடஒதுக்கீடு போராட்டம் உக்கிரமாக நடந்தது. அப்போது மராத்தா இடஒதுக்கீடு கோரி 10க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்தனர். இதனால் மராத்தா சமூகத்துக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 16% இடஒதுக்கீடு வழங்குவதாக மாநில அரசு அறிவித்தது. ஆனால் உச்சநீதிமன்றம் இதற்கு தடை விதித்தது. இது மராத்தா இடஒதுக்கீடு போராட்டத்துக்கு பெரும் பின்னடைவானது. இதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் மராத்தா இடஒதுக்கீடு போராட்டம் பூதாகரமாக வெடித்திருக்கிறது. மராத்தா சமூக செயற்பாட்டாளர் மனோஜ் ஜராங்கே, ஆகஸ்ட் மாதம் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். இந்த போராட்டத்தை போலீசார் ஒடுக்கியது பெரும் சர்ச்சையானது. அப்போது முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, மனோஜ் ஜராங்கேவை சந்தித்து மராத்தா இடஒதுக்கீடு குறித்து உறுதி அளித்தார். இந்த உறுதிமொழியை நிறைவேற்ற அக்டோபர் 24-ந் தேதி வரை கெடு விதிக்கப்பட்டது. ஆனால் மகாராஷ்டிரா அரசு தங்களது வாக்குறுதியை நிறைவேற்றாத நிலையில் மனோஜ் ஜராங்கே மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகிறார்.

இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து 2 எம்பிக்கள், 3 எம்.எல்.ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். மராத்தா இடஒதுக்கீட்டை எதிர்க்கும் தலைவர்கள் வீடுகள், அலுவலகங்கள் தீக்கிரையாக்கப்பட்டு வருகின்றன. இதனால் மகாராஷ்டிராவில் பெரும் பதற்றம் தொடருகிறது. மராத்தா இடஒதுக்கீடு நடைபெறும் 5 மாவட்டங்களில் இணையசேவை துண்டிக்கப்பட்டுள்ளது. இதேபோல பேருந்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே நேற்று மாநில அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார். பின்னர் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் மனோஜ் ஜாரங்காவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார் முதல்வர் ஷிண்டே. அப்போது மராத்தா ஜாதியினருக்கான இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி மொழி கொடுத்தார் முதல்வர் ஷிண்டே. இதனைத் தொடர்ந்து இன்று மாநிலத்தில் அனைத்து அரசியல் கட்சிகளின் கூட்டத்தை கூட்டியுள்ளார் முதல்வர் ஷிண்டே.