நடிகை கவுதமி புகார் தொடர்பாக அழகப்பன் வீட்டில் போலீஸார் சோதனை!

நடிகை கவுதமி நிலத்தை மோசடி செய்ததாக புகார் எழுந்த நிலையில், சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கோட்டையூரில் உள்ள அழகப்பன் வீட்டில் சென்னை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் நேற்று சோதனை நடத்தினர்.

தனக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை, பாஜகவைச் சேர்ந்த கோட்டையூர் அழகப்பன்(70) மற்றும் அவரது குடும்பத்தினர் மோசடியாக விற்றுவிட்டதாக, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை கவுதமி புகார் அளித்தார். அதன்பேரில், சென்னை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், கோட்டையூரில் உள்ள அழகப்பனின் வீட்டில் சென்னை பொருளாதாரக் குற்றப்பிரிவு உதவி ஆணையர் ஜான்விக்டர் தலைமையிலான போலீஸார் நேற்று சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்கிருந்த சில ஆவணங்களை போலீஸார் கைப்பற்றி, தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். சோதனையின்போது, காரைக்குடி வட்டாட்சியர் தங்கமணி மற்றும் வருவாய்த் துறையினர் உடனிருந்தனர்.