அமைச்சர் எ.வ.வேலுவை குறிவைத்து வருமான வரித்துறையினர் சோதனை!

திமுக அமைச்சர் எ.வ.வேலுவை குறிவைத்து வருமான வரித்துறையினர் இன்று களமிறங்கியுள்ளனர். சென்னை, திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் எ.வ.வேலுவிற்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழக அரசின் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருப்பவர் எ.வ.வேலு. இவரது வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை 6 மணி முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் அதிகாலையிலேயே அதிகாரிகள் தயாராக வந்துவிட்டனர். அமைச்சர் எ.வ.வேலுவிற்கு சொந்தமாக வீடு, அலுவலகங்கள், கலை அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், ஓட்டல்கள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்டவை இருக்கின்றன. இவை அனைத்தையும் டார்கெட் செய்து வருமான வரித்துறை அதிகாரிகள் களமிறங்கியுள்ளனர். குறிப்பாக சென்னை, திருவண்ணாமலை ஆகிய நகரங்களில் எ.வ.வேலுவிற்கு சொந்தமான இடங்களில் ஏராளமான அதிகாரிகள் சோதனை செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எந்த விவகாரத்திற்காக இந்த சோதனை? என்று கேட்கையில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த விவகாரத்தில் அதிரடி காட்டப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியின் போதே எ.வ.வேலு மீது வழக்கு தொடரப்பட்டது. ஆனால் அந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். இருப்பினும் அதன் அடிப்படையில் இன்றைய சோதனை இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. மேலும் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்கள் வீடுகளிலும் சோதனை நடப்பது தான். திருவண்ணாமலையில் அருணை பொறியியல் கல்லூரி, மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி, கெஸ்ட் ஹவுஸ், எ.வ.வேலு வீடு உள்ளிட்டவை ஒரே காம்பவுண்டில் தான் இருக்கின்றன. அங்கு தான் வருமான வரித்துறை சோதனையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னையை பொறுத்தவரை புரசைவாக்கம், கிண்டி உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட இடங்களை குறிவைத்து சோதனை நடப்பதாக கூறப்படுகிறது.