பீகாரில் இடஒதுக்கீடு 50%-ல் இருந்து 65% ஆக உயர்த்தப்படும்: நிதிஷ் குமார் அறிவிப்பு!

பீகார் மாநிலத்தில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி மக்களுக்கான இடஒதுக்கீட்டு அளவை 65% ஆக அதிகரிப்பதாக முதல்வர் நிதிஷ்குமார் அதிரடியாக அறிவித்துள்ளார்.

பீகார் மாநிலத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பை அம்மாநில அரசு அண்மையில் நடத்தியது. 1931ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில்தான் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் பின்னர் இன்று வரை ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. நாட்டில் முதல் முறையாக பீகார் அரசு ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தியது. பீகார் சட்டசபையில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்கள் இன்று தாக்கல் செய்யப்பட்டன. ஜாதிவாரியாக மக்களின் பொருளாதார நிலைமை குறித்தும் இந்த அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளன. சட்டசபையில் பேசிய முதல்வர் நிதிஷ்குமார், பீகாரில் 60%க்கும் அதிகமாக பிற்படுத்தப்பட்ட மக்கள் உள்ளனர். ஆகையால் அவர்களுக்கான இடஒதுக்கீடு 30%-ல் இருந்து 43% ஆக உயர்த்தப்படுகிறது என அறிவித்தார்.

தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களுக்கான இடஒதுக்கீடு 69% ஆக உள்ளது. இந்த 69% இடஒதுக்கீடு சட்டத்துக்கு அரசியல் சாசன பாதுகாப்பு வழங்கும் வகையில் ஏற்கனவே ஜனாதிபதியின் ஒப்புதல் பெறப்பட்டு அரசியல் சாசனத்தின் 9-வது அட்டவணையில் சேர்க்கப்பட்டுவிட்டது. இதனால் உச்சநீதிமன்றத்தில் முட்டி மோதியும் தமிழ்நாட்டின் 69% இடஒதுக்கீட்டுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இதர மாநிலங்களின் இடஒதுக்கீடு வழக்குகளில் உச்சநீதிமன்றமானது இடஒதுக்கீடு அளவு 50%க்குள் இருக்க வேண்டும் என தீர்ப்புகள் வழங்கி இருந்தது. இந்த 50% அளவு வரையறையை மாற்ற வேண்டும் என்பது பல்வேறு மாநிலங்களின் கோரிக்கையாகும்.

பீகார் சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத் தொடரில் முதல்வர் நிதிஷ் குமார் பேசியதாவது:-

நாடு தழுவிய சாதிவாரி கணக்கெடுப்பு இன்னும் நடத்தப்படவில்லை. இருந்தும், சில சாதிகளின் மக்கள் தொகை அதிகரித்துவிட்டதாகவும், சில சாதிகளின் மக்கள் தொகை குறைந்து விட்டதாகவும் கூறுகின்றனர். இது அபத்தம். நாடு தழுவிய சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துமாறு மத்திய அரசை நாங்கள் கோருகிறோம். அப்போதுதான் ஒவ்வொருவருக்குமான கொள்கைகளை நம்மால் வகுக்க முடியும். பீகார் ஏழ்மை நிறைந்த மாநிலம் என்பதால், இதற்கு சிறப்பு சலுகைகளை மத்திய அரசு வழங்க வேண்டும். அப்போதுதான் பீகார் முன்னேறும்.

குடியரசுத் தலைவராக ஜெயில் சிங் இருந்தபோது, நாடு தழுவிய சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று என்னிடம் கூறினார். அதை மனதில் வைத்துத்தான் 2019-ம் ஆண்டு சாதிவாரி கணக்கெடுப்பை பிகாரில் நடத்துவதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மசோதா நிறைவேற்றப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டது. சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு, தயார் நிலையில் இருந்தபோது நீதிமன்றம் அதற்கு தடை விதித்தது. இது குறித்த விசாரணைக்குப் பிறகு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதன் பிறகு, சாதிவாரி கணக்கெடுப்பு விஷயத்தில் தலையிட முடியாது என உச்ச நீதிமன்றமும் கூறியது.

சாதிவாரி கணக்கெடுப்பின்படி, பீகாரில் 59.13 சதவீத மக்கள் சொந்த வீடு வைத்துள்ளனர். 40 லட்சம் மக்கள் குடிசைப் பகுதிகளில் வாழ்கிறார்கள். 63,850 பேருக்கு வீடு இல்லை. அவர்களுக்கு வீடு வழங்க வேண்டும். 94 லட்சம் குடும்பங்கள் பொருளாதார ரீதியில் பின்தங்கி உள்ளன. அவர்களுக்கு ரூ. 2 லட்சம் கொடுக்க திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் அவர்கள் சில பணிகளை தொடங்க முடியும். பீகார் மாநிலத்தில் தற்போது உள்ள 50 சதவீத இடஒதுக்கீடு, 65 சதவீதமாக உயர்த்த முன்மொழியப்பட்டுள்ளது. பட்டியலின மக்களுக்கான இடஒதுக்கீடு 13 சதவீதத்தில் இருந்து 20% ஆகவும், இரு பிரிவு ஓபிசி இடஒதுக்கீடு 30 சதவீதத்தில் இருந்து 43% ஆகவும் உயர்த்தப்படும். பழங்குடியினர் இடஒதுக்கீடு 2% ஆக நீடிக்கும். இதற்கான சட்ட மசோதா நடப்புக் கூட்டத் தொடரிலே கொண்டுவரப்படும். பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர் சாதியினருக்ககான 10 சதவீத இட ஒதுக்கீட்டையும் சேர்ப்பதன் மூலம் இடஒதுக்கீட்டு அளவு 75 சதவீதமாக உயரும். இவ்வாறு அவர் பேசினார்.

அமைச்சர் விஜய் குமார் சவுத்ரி கூறுகையில், “பீகாரில் கல்வி அறிவு 79.70 சதவீதம் ஆக உள்ளது. பெண்களின் கல்வி அறிவு ஒப்பீட்டளவில் உயர்ந்துள்ளது. ஆயிரம் ஆண்களுக்கு தற்போது 953 பெண்கள் கல்வி அறிவு பெற்றுள்ளனர். கடந்த 2011ல் இது 918 ஆக இருந்தது. மாதம் அதிகபட்சம் ரூ.6 ஆயிரம் வருவாய் ஈட்டுபவர்களை ஏழைகளாக வரையறுத்துள்ளோம்” என தெரிவித்தார்.