அயோத்தி ராமர் கோயிலுக்கு தமிழகத்தில் இருந்து இலவச ரயில்: அண்ணாமலை

அயோத்தியில் புதிதாக ராமர் கோயில் கட்டப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் இருந்து தினமும் அயோத்திக்கு இலவச ரயில் சேவை தொடங்கப்படும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ‘என் மண்; என் மக்கள்’ பாதயாத்திரையின் இரண்டாவது கட்டத்தை தொடங்கியுள்ளார். அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நேற்று வருகை தந்த அண்ணாமலை அங்குள்ள மக்கள் மத்தியில் உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

நாங்கள் தான் சமூக நீதியின் காவலர்கள் என்று வாய் கிழிய திமுகவினர் பேசி வருகிறார்கள். ஆனால் தமிழகத்தில் தான் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான வன்கொடுமைகளும், குற்றங்களும் அதிகம் நடக்கின்றன. வேங்கைவயல் சம்பவத்தை விட இதற்கு என்ன உதாரணத்தை சொல்லி விட முடியும்? தாழ்த்தப்பட்டவர்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மனித மலத்தை சில கொடூரர்கள் கலந்திருக்கிறார்கள். ஆனால் ஒரு வருடமாகியும் இன்று வரை அந்த கேவலமான சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய முடியவில்லை. இந்த லட்சணத்தில் தான் திமுகவினர் சமூக நீதி பேசி வருகின்றனர்.

தமிழகத்தில் 37 மாவட்டங்களில் உள்ள 345 கிராமங்களில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக குற்றங்களும், வன்முறைகளும் நடைபெறுவதாக மூத்த அமைச்சர் ஒருவரே கூறியிருக்கிறார். இரண்டு நாட்களுக்கு முன்பு கூட, திருநெல்வேலியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மீது மாற்று சமூகத்தைச் சேர்ந்த சிலர் சிறுநீர் கழித்து இருக்கிறார்கள். இதுதான் தமிழ்நாட்டில் இருக்கும் சட்டம் ஒழுங்கு. எனவே வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு நீங்கள் பாடம் கற்பிக்க வேண்டும். பாஜகவுக்கு ஆதரவளிக்க வேண்டும்.

அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் ஜனவரி மாதம் 22-ம் தேதி நடைபெறவுள்ளது. கும்பாபிஷேகம் முடிந்த பிறகு, தமிழகத்தில் இருந்து தினமும் ஒரு ரயில் அயோத்திக்கு இயக்கப்படும். 60 நாட்களுக்கு இயக்கப்படும் இந்த ரயிலில் மக்கள் இலவசமாக பயணம் செய்து ராமரை தரிசிக்கலாம். இதற்கான முழு செலவையும் பாஜக ஏற்றுக் கொள்ளும். சனாதனத்தையும், இந்து தர்மத்தையும் அழிக்க வேண்டும் என நினைப்பவர்கள் மத்தியில் இருந்து, இன்னும் பல ஆயிரம் வருடங்களுக்கு நாம் சனாதன தர்மத்தை நாம் எடுத்து செல்ல வேண்டும். அதற்காகதான் இந்த ஏற்பாடை பாஜக செய்திருக்கிறது. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.