தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ பொங்களுக்கு வெளியீடு!

தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

‘சாணிக்காயிதம்’, ‘ராக்கி’ படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் படம் ‘கேப்டன் மில்லர்’. பீரியட் படமாக உருவாகும் இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் பிரியங்கா அருள் மோகன் நாயகியாக நடிக்கிறார். சந்தீப் கிஷன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கேன் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படம் 3 பாகங்களாக உருவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கடந்த ஆறு மாதங்களாக இப்படத்தில் நடித்து வந்த அவருக்கான படப்பிடிப்பு ஜூலை 19-ம் தேதியுடன் நிறைவடைந்தது.

இப்படம் வரும் டிசம்பர் 15-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ரிலீஸ் தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி திரையரங்குகளில் வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி பிலிம்ஸ் அறிவித்துள்ளது. இதனால் தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.