சனாதனத்தை ஒழிக்கிறது இருக்கட்டும்.. முதல்ல கொசுவை ஒழிங்க: டாக்டர் கிருஷ்ணசாமி!

சனாதனத்தை ஒழிப்பது இருக்கட்டும் முதலில் கொசுவை ஒழியுங்கள் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அறிவுரை கூறியுள்ளார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டெங்கு மலேரியா மற்றும் கொரோனாவை போல் சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும் என சனாதன ஒழிப்பு மாநாட்டில் கூறியிருந்தார். அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. உதயநிதியின் பேச்சுகக்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்தன. சனாதனம் குறித்து தான் பேசியதில் இருந்து பின்வாங்கப் போவதில்லை. அதில் எந்த தவறும் இல்லை என கூறி வருகிறார். மேலும் அதற்காக என்ன நடந்தாலும் சட்டப்படி சந்திக்க தயார் என்றும் கூறி வருகிறார் உதயநிதி ஸ்டாலின்.

புதிய தமிழகம் கட்சியின் திருச்சி, புதுக்கோட்டை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், பெரம்பலூர் ஆகிய நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி முகாம் திருச்சியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து அக்கட்சியின் தலைவரான டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், தேர்தல் வரும் போது அணிகள் அமைவதை பொறுத்து தொகுதிகள் குறித்து முடிவு செய்யப்படும் என்றார். பாஜக, அதிமுக கூட்டணி முறிவு குறித்த கேள்விக்கு பதில் அளித்த கிருஷ்ணசாமி, தை பிறந்தால் வழி பிறக்கும் என்றும் ஜனவரி பிறந்த பிறகு தான் அரசியல் சூழ்நிலைகள் தெளிவாகும் என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் திமுக, அதிமுக தான் பெரிய கட்சி என்று நினைக்க வேண்டாம், புதிய புதிய சக்திகள் உருவாகி வருகின்றன என்றார். புதிய தமிழகம் கட்சி தமிழகத்தில் முக்கியமான அரசியல் சக்தியாக உள்ளது என்றும் தென் தமிழகத்தில் மூன்றாவது பெரிய சக்தியாக புதிய தமிழகம் கட்சி உள்ளது என்றும் கூறினார்.

மேலும் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசி வருவது குறித்து பதில் அளித்த கிருஷ்ணசாமி, உதயநிதி சனாதானத்தை அப்புறம் ஒழிக்கட்டும், முதலில் கொசுவை ஒழிக்கட்டும் என்றார். கொசுவை ஒழித்தால் டெங்கு, மலேரியாவை ஒழிக்கலாம் என்ற கிருஷ்ணசாமி, ஒழிக்க முடியாததை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் கூறினார்.

மேலும் ஊர் ஊராக சென்று கையெழுத்து வாங்குவதால் எதுவும் நடக்காது என்றும் கிருஷ்ணசாமி தெரிவித்தார். மேலும் திருச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் பெரியார் சிலை எடுக்கப்படும் என அண்ணாமலை கூறியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த கிருஷ்ணசாமி, தமிழகத்தில் சாலையோரம் இருக்கிற அனைத்து சிலைகளும் எடுக்கப்பட வேண்டும் என்றார்.

தனிப்பட்ட முறையில் பெரியார் சிலையை மட்டும் அகற்றுவது எதிர் விளைவுகளை உருவாக்கலாம் என்றும் சிலைகளை அகற்ற வேண்டும் என்றால் அனைத்து சிலைகளும் அகற்றப்பட வேண்டும் என்றும் கூறினார். கோவில் சொத்துக்களை பராமரிக்க கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்றம் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.