என்னை பொறுத்தவரை ராணுவ வீரர்கள் இருக்கும் இடமே அயோத்தி: பிரதமர் மோடி

ராமர் இருக்கும் இடமே அயோத்தி எனக் கூறப்படுகிறது. என்னை பொறுத்தவரை ராணுவ வீரர்கள் இருக்கும் இடமே அயோத்தி என்று பிரதமர் மோடி கூறினார்.

பிரதமராக மோடி பதவியேற்றதில் இருந்து ஒவ்வொரு தீபாவளி பண்டிகையையும் ராணுவ வீரர்களுடன் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் நேற்றும் தீபாவளி பண்டிகையை பிரதமர் மோடி ராணுவ வீரர்களுடன் கொண்டாடினர். இமாசல பிரதேசத்தின் லெப்ஷா பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுடன் சேர்ந்து பிரதமர் மோடி தீபாவளி பண்டிகையை கொண்டாடினர். பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது:-

ராமர் இருக்கும் இடமே அயோத்தி எனக் கூறப்படுகிறது. என்னை பொறுத்தவரை ராணுவ வீரர்கள் இருக்கும் இடமே அயோத்தி. இந்திய ராணுவம் இருக்கும் இடம் கிட்டதட்ட கோவிலுக்கு சமமானது. எல்லையில் உள்ள நாட்டின் வலிமையான சுவர் தாங்கள்தான் என்பதை ராணுவ வீரர்கள் எப்போதும் நிரூபித்துள்ளனர். 140 கோடி இந்தியர்களும் தங்கள் குடும்பம் என்பதை ராணுவ வீரர்கள் அறிவர்.

கடந்த 35 ஆண்டுகளில் ராணுவ வீரர்களுடன் கொண்டாடாத ஒரு தீபாவளி கூட இல்லை. நான் பிரதமராகவோ, முதல்வராகவோ இல்லாத போதும் தீபாவளி அன்று எல்லைக்கு செல்வேன். குடும்பத்தை விட்டு எல்லையில் நிற்பது உங்கள் பணியின் உச்சத்தைக் காண்பிக்கிறது. நாட்டை கட்டி எழுப்புவதில் பாதுகாப்பு படைகள் தொடர்ந்து பங்களிப்பை அளித்து வருகின்றன” என்றார்.

இந்நிலையில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை பிரதமர் மோடி நேற்று சந்தித்து பேசினார். ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. தீபாவளி பண்டிகையை ஒட்டி நடைபெற்ற இந்த சந்திப்பின் போது பரஸ்பரம் தீபாவளி வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டதாக தெரிகிறது. அதேபோல், ஜனாதிபதி திரவுபதி முர்முவை துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரும் சந்தித்து பேசினார். மத்திய அமைச்சர்கள் பியூஸ் கோயல், ஸ்மிரிதி ராணியும் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து பேசினார். முன்னதாக இன்று காலை நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்.