முதல்வர் ஸ்டாலின், இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து கூட சொல்ல மனம் வராதது ஏன்?: எல். முருகன்

மற்ற மதத்தினரின் பண்டிகைகளுக்கு எல்லாம் ஓடோடி போய் கலந்துகொள்ளும் முதல்வர் ஸ்டாலின், இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து கூட சொல்ல மனம் வராதது ஏன்? என்று மத்திய அமைச்சர் எல். முருகன் கேள்வியெழுப்பியுள்ளார்.

தமிழகத்தில்ஆட்சியில் இருந்தாலும் சரி, ஆட்சியில் இல்லாவிட்டாலும் சரி.. தீபாவளிக்கு திமுக தலைமையோ, அதன் மற்ற தலைவர்களோ வாழ்த்து சொல்ல மாட்டார்கள். இது திமுக காலம் காலமாக கடைப்பிடிக்கும் கொள்கைகளில் ஒன்று. தீபாவளி மட்டுமல்லாமல் விநாயகர் சதூர்த்தி, சரஸ்வதி பூஜை போன்ற இந்து பண்டிகளைகளுக்கு திமுக தலைவர் வாழ்த்து கூறும் வழக்கம் கிடையாது. இந்நிலையில், இந்த விவகாரத்தை தற்போது கையில் எடுத்து அரசியல் செய்து வருகிறது பாஜக. முஸ்லிம் பண்டிகைகளுக்கும், கிறிஸ்தவர்களின் பண்டிகைகளுக்கும் வாழ்த்து தெரிவிக்கும் முதல்வர் ஸ்டாலின், ஏன் தீபாவளிக்கு வாழ்த்து சொல்வதில்லை என்று தமிழக பாஜகவினர் கேள்வியெழுப்பி வருகின்றனர். குறிப்பாக, நேற்று இதுதொடர்பாக பேசிய பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், தீபாவளிக்கு முதல்வர் வாழ்த்து கூற முடியாத அளவுக்கு இந்துக்கள் என்ன தவறு செய்துவிட்டார்கள் என்றும், இந்துக்களை எதிரிகளாக முதல்வர் நினைக்கிறார் எனவும் காட்டமாக பேசி இருந்தார்.

இந்நிலையில், இதே விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் எல். முருகனிடம் நிருபர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்து எல். முருகன் கூறியதாவது:-

வருஷா வருஷம் இந்தக் கொடுமையை பார்த்துட்டு தான் இருக்கோம். ஒரு முதலமைச்சர் தனது மாநில மக்களுக்கு தீபாவளி வாழ்த்து சொல்லாமல் இருப்பது உண்மையிலேயே துரதிருஷ்டவசமான ஒன்று. நீங்க சாமி கும்பிடலைனா அது உங்க தனிப்பட்ட விஷயம். ஆனால் ஒரு மாநிலத்தின் முதல்வராக இருப்பவர் அனைத்து தரப்பு மக்களுக்கும் பொதுவானவராக இருக்க வேண்டும். நீங்க சாமி கும்பிடாதவர் என்றால், எந்த பண்டிகைக்கும் நீங்க வாழ்த்து சொல்லாமல் இருக்கணும்.

குல்லா போட்டுட்டு போய் கஞ்சி குடிக்கிறீங்க; கிறிஸ்தவர்களின் சர்ச்சுகளுக்கு போய் கேக் வெட்டி சாப்பிடுறீங்க. நீங்க எங்க வேண்டுமானாலும் போங்க. அது உங்களோட விருப்பம். நாங்க அதை தடுக்க மாட்டோம். ஏனென்றால் எல்லா மதத்தினரின் உரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று நினைக்கும் கட்சிதான் பாஜக. ஆனால் இதையெல்லாம் செய்ய முடிகிற உங்களால், தீபாவளிக்கு வாழ்த்து சொல்வதில் என்ன நெருடல் இருக்கிறது என்றுதான் நாங்கள் கேட்கிறோம். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

சனாதனத்தை ஒழிப்போம்னு சொல்றீங்க. அப்படி சொல்லும் திமுக என்ற நரகாசுரன் தமிழக மக்களால் ஒழிக்கப்பட வேண்டும். இதற்கெல்லாம் தமிழக மக்கள் திமுகவுக்கு பாடம் கற்பிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை. வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக என்ற நரகாசுரனை வதம் செய்து தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்கும். இவ்வாறு எல். முருகன் கூறினார்.