சங்கரமடம் எப்போதாவது தீபாவளி வாழ்த்து சொல்லி இருக்கிறதா?: சுப. வீரபாண்டியன்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தீபாவளி வாழ்த்து சொல்லவில்லை என்பதை ஒரு குற்றச்சாட்டாக பாஜகவினர் முன்வைத்து வரும் நிலையில், இதுவரை என்றாவது சங்கரமடம் தீபாவளி வாழ்த்து சொல்லி இருக்கிறதா? என்று திராவிடர் கழக மூத்த தலைவர் சுப வீரபாண்டியன் கேள்வியெழுப்பியுள்ளார்.

ரம்ஜான், கிறிஸ்துமஸ் போன்ற மற்ற மதத்தினரின் பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின், தீபாவளி, விநாயகர் சதூர்த்தி போன்ற இந்து பண்டிகைகளுக்கு ஏன் வாழ்த்து தெரிவிப்பதில்லை? என்று பாஜகவினர் கேள்வியெழுப்பி வருகின்றனர். இதனிடையே, இந்த விவகாரம் குறித்து நேற்று பேசிய பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான எல். முருகன் முதல்வரை காட்டமாக விமர்சித்தார். “மற்ற பண்டிகைகளுக்கு முதல்வர் வாழ்த்து சொல்லாமல் இருந்தால் பரவாயில்லை. குல்லா போட்டு கஞ்சி குடிக்க போறாரு.. சர்ச்சுக்கு போய் கேக் வெட்டி சாப்பிடுறாரு. தீபாவளிக்கு மட்டும் வாழ்த்து சொல்ல முதல்வர் ஸ்டாலினால் முடியவில்லையா? இந்துக்களுக்கு எதிராக செயல்படும் திமுக என்ற நரகாசுரனை பாஜக விரைவில் வதம் செய்யும்” என அவர் பேசியிருந்தார்.

இந்நிலையில், எல். முருகன் இவ்வாறு பேசியது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு சுப. வீரபாண்டியன் பேட்டி அளித்தார். அவர் கூறியாவது:-

தீபாவளி விஷயத்திற்கு பிறகு வருகிறேன். முதலில் இப்படியொரு பேச்சை எல். முருகன் பேசியதற்கு காரணம் தனது இருப்பை கட்சியில் காட்டிக் கொள்வதற்காக தான். அண்ணாமலைக்கும், எல். முருகனுக்கும் இடையேயான பூசலின் வெளிப்பாடுதான் இது. நானும் கட்சியில் இருக்கிறேன் என காட்டிக்கொள்ள எல். முருகன் இவ்வாறு பேசி இருக்கிறார். மேலும், திமுகவை வெற்றி பெறுவோம் என்று அவர் கூறவில்லை பாருங்கள். மாறாக, திமுகவை வதம் செய்வோம் எனக் கூறியிருக்கிறார். வதம் என்றால் என்ன என்று எல்லோருக்கும் தெரியும். வதம் செய்து கொண்டாடுவது தான் உங்களுக்கு தெரியுமா? என்றைக்கும் நல்லதை கொண்டாடவே மாட்டீர்களா?

தீபாவளியே அப்படித்தானே. அடுத்தவன் சாவை கொண்டாடுவது தானே தீபாவளி. யாராக இருந்தாலும் அவர் நம்முடைய கருத்துக்கு எதிர்கருத்து கொண்டவனாக இருந்தாலும், அவர் இறந்து போனால் அது கொண்டாடுவதற்கான விஷயம் அல்ல. இறப்பு என்பது அடிப்படையாகவே கொண்டாட்டத்திற்கு உரியது இல்லை. சரி அதை விடுங்கள். முதல்வர் வாழ்த்து சொல்லாதது ஏன் என்று பார்ப்போம். அரசாங்கம் எல்லோருக்கும் பொதுவானது தானே. அதை ஒப்புக் கொள்கிறீர்கள் அல்லவா? சரி. இந்த தீபாவளி என்பதே தேவர் – அசுரர் யுத்தத்தின் விளைவு தானே. அரசாங்கம் என்று ஒன்று இருந்தால் அது தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் பொதுவானது தானே. அப்படி இருக்கும் போது, ஒருவர் இறந்ததை எப்படி வாழ்த்த முடியும்? நீங்கள் ஒரு விஷயத்தை எண்ணிப் பார்க்க வேண்டும். நான் ஒரு கேள்வியை கேட்கிறேன். பெரியார் பிறந்தநாளுக்கு அவர்கள் (பாஜக, வலதுசாரிகள்) வாழ்த்து சொல்வார்களா? அவர்களின் ஆதிக்கத்தை எதிர்த்த ஒருவருக்கே அவர்கள் வாழ்த்து சொல்ல மாட்டார்கள். அப்படி இருக்கும் போது, ஒருவர் கொல்லப்பட்டதற்கு எப்படி வாழ்த்து சொல்ல முடியும்? அதுவும், போரில் ஒருவரை மற்றொருவர் கொல்லப்பட்டார் என்று சொல்லப்படுவது ஒரு வகை கதை. அதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது; அறிவியல் இருக்கிறது என்பதையும் நாம் பார்க்க வேண்டும்.

அதேபோல், மக்களும் நரகாசுரன் இறந்ததற்காக எல்லாம் தீபாவளியை கொண்டாடவில்லை. புதுத்துணி கிடைக்கிறது. விடுமுறை கிடைக்கிறது. உறவினர்களை பார்க்க முடியும் என்பதற்காகதான் தீபாவளியை கொண்டாடுகிறார்கள். புது திரைப்படங்கள் வருகின்றன. மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அவ்வளவுதான். அதே மாதிரி, இந்த அரசு என்ன செய்திருக்கிறது? தீபாவளிக்கு வாழ்த்து சொன்னதோ இல்லையோ.. ஆனால் பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாட, மகளிர் உரிமைத் தொகையை முன்கூட்டியே கொடுத்தது. சிறப்பு பேருந்துகளை விட்டது. மக்கள் விருப்பத்திற்கு அரசு குறுக்கே நிற்கவில்லையே.

அவர்களுக்கு (பாஜக) முதல்வர் வாழ்த்து சொல்லாதது எல்லாம் கவலை கிடையாது. இந்த நரகாசுரன் கதையை மக்கள் மறந்து விட்டார்களே என்பது தான் அவர்களின் கவலை. தீபாவளிக்கு என்ன சொல்லப்பட்டிருக்கிறது தெரியுமா? கங்கா ஸ்நானம் செய்து, கடவுளை வழிபட வேண்டும் என்பதுதான் தீபாவளியின் நோக்கம். ஆனால் நேற்று என்ன நடந்தது? துணிக்கடை, பட்டாசுக் கடை எல்லாவற்றையும் விட கறிக்கடையில் தான் கூட்டம் அதிகம் இருந்தது என்பதுதான் நேற்றைய முக்கியச் செய்தி. கறிக்கடையில் கூட்டம் அலைமோதுவதை அவர்கள் ஏற்கிறார்களா? சரி. இவ்வளவு சொல்கிறார்களே.. சங்கரமடம் என்றைக்காவது தீபாவளிக்கு வாழ்த்து சொல்லி இருக்கிறதா? அதை ஏன் என்று இவர்கள் கேட்பார்களா? இவ்வாறு சுப. வீரபாண்டியன் கூறினார்.