தூத்துக்குடியில் ராவ்பகதூர் குரூஸ் சிலையை இன்று திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்!

தூத்துக்குடி மக்களின் தந்தை என்று அழைக்கப்படும் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸுக்கு ரூ.77.87 லட்சம் மதிப்பீட்டில் தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட குவிமாடத்துடன் கூடிய திருவுருவச் சிலையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைக்க உள்ளார்.

இந்தியாவின் மிகப்பெரிய துறைமுக நகராகவும், கடல் வானிபம், உப்பு உற்பத்தி, தொழிற்துறையில் சிறந்து விளங்கும் மிக முக்கியமான நகராக தூத்துக்குடி திகழ்ந்து வருகிறது. இங்கு 1909 ஆம் ஆண்டு முதல் 5 முறை நகராட்சித் தலைவராக பதவி வகிர்த்த ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் என்பவர் தாமிரபரணி ஆற்றில் இருந்து குழாய் மூலம் குடிநீர் இணைப்பை கொண்டு வந்ததுடன், நகரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களில் நிறைவேற்றினார். இவரை தூத்துக்குடி மக்களின் தந்தை என மக்கள் அழைக்கிறார். இந்த நிலையில் தமிழ்நாடு அரசு சார்பில் இவருக்கு சிலை அமைக்கப்பட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அதை திறந்து வைக்க உள்ளார்.

இது குறித்து அரசு வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில், “ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் அவர்கள் தூத்துக்குடியில் 15.11.1869 அன்று பிறந்தார். அறிவுத் திறமையும், அறிவுக் கூர்மையும் கொண்டவர். உழைப்பால் உயர்ந்தவர். ஈடுபடும் செயலில் இடர்களும் தடைகளும் தொடர்ந்தாலும், அச்செயல் பலருக்கு பயன்படும் எனில், அதனை செய்து முடித்து வெற்றி காணும் மன உறுதி கொண்டவர் அவர். தூத்துக்குடி நகராட்சி தலைவராக 21.12.1909 இல் பொறுப்பேற்ற ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் அவர்கள் மக்களின் பேராதரவுடன் ஐந்து முறை தொடர்ந்து நகராட்சி மன்றத் தலைவராக விளங்கியுள்ளார். கடற்கரை நகரமான தூத்துக்குடி நீண்ட நெடுங்காலமாகவே குடிநீர் பிரச்சினையால் சிரமப்பட்டு வந்துள்ளது. 1927 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் மிகக் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்பட்டபோது மிகுந்த தொலைநோக்குப் பார்வையுடன். நெல்லை தாமிரபரணி ஆற்றிலிருந்து குழாய் மூலம் நீர் கொண்டு வரும் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தி, மக்களின் பாராட்டினை பெற்றார். இந்தக் குடிநீர்ப் பிரச்சினைகள் தீர்ந்தது மட்டுமல்லாமல் நகரின் பல வளர்ச்சிப் பணிகளையும் நிறைவேற்றியதனால் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் அவர்கள் “தூத்துக்குடி மக்களின் தந்தை” என போற்றப்படுகிறார்.

இத்தகைய மாமனிதர் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் அவர்களைப் போற்றும் வகையில் அவருக்கு தூத்துக்குடி மாநகராட்சியில் குவிமாடத்துடன் கூடிய முழு உருவச் சிலை அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசால் 13.11.2021 அன்று அறிவிக்கப்பட்டு. 14.10.2022 அன்று உரிய அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, தமிழ்நாடு அரசின் சார்பில் தூத்துக்குடி மாநகராட்சி பூங்காவில் 77.87 இலட்சம் ரூபாய் செலவில் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் அவர்களுக்கு குவிமாடத்துடன் கூடிய திருவுருவச் சிலையினை 14.11.2023 அன்று காலை 11.30 மணியளவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை தமைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைக்கிறார்கள்” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.