மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யாவுக்கு தலைவர்கள் புகழஞ்சலி!

சுதந்திரப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான என்.சங்கரய்யா உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 102.

சுதந்திரப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான என்.சங்கரய்யா உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 102. தமிழகத்துக்கு ஆற்றிய தொண்டினைப் போற்றும் விதமாக அவருக்கு அரசு மரியாதையுடன் பிரியாவிடை அளிக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். கட்சியில் ‘இரும்பு மனிதர்’ என்று அழைக்கப்பட்ட என்.சங்கரய்யாவின் உத்வேக அரசியல் வாழ்வின் 10 குறிப்புகள்…

1. மாணவப் பருவத்திலேயே பொதுவாழ்வுக்கு வந்தவர் என்.சங்கரய்யா. 1922 ஜூலை 15-ல் கோவில்பட்டியில் பிறந்தவர். இயற்பெயர் பிரதாப சந்திரன். அவரது பாட்டனார் எல்.சங்கரய்யா தன் பெயரைத்தான் வைக்க வேண்டும் என்று அடம்பிடித்து வீட்டில் உண்ணாவிரதம் இருக்க, பள்ளியில் படித்துக்கொண்டிருந்த பிரதாப சந்திரனின் பெயர் சங்கரய்யாவானது!

2. அமெரிக்கன் கல்லூரி மாணவராக இருந்தபோது, மதுரையில் நடைபெற்ற ஆலயப் பிரவேசப் போராட்டம் பெரும் உத்வேகம் தந்தது. சுயமரியாதை இயக்கம் மீது பெரும் மரியாதை வைத்திருந்த சங்கரய்யா, 1938-ல் இந்தித் திணிப்புக்கு எதிராக திராவிட இயக்கம் நடத்திய போராட்டத்தில் பங்கேற்று ராஜாஜிக்குக் கறுப்புக்கொடி காட்டியவர். 1941-ல் போராட்டக் கனல் மதுரையையும் பற்றியது. பி.ஏ. இறுதித் தேர்வு எழுத 15 நாட்களே இருந்த நிலையில் போராட்டத்தில் கலந்துகொண்ட சங்கரய்யா கைதானார். படிப்பே நின்றுவிட்டது. மகனை வழக்கறிஞராக்க வேண்டும் என்ற தந்தையின் ஆசையும் நிராசையானது.

3. ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தின்போது நெல்லையில் பல்வேறு கல்லூரி மாணவர்களைத் திரட்டி ஆட்சியர் அலுவலகத்தை நோக்கிப் பேரணி நடத்தினார். தடியடியில் காயமடைந்து பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். சிறைக்குள் இருந்த காலத்தில் காங்கிரஸார் பலரை கம்யூனிஸ்ட்களாக்கிவிட்டார்!

4. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாவட்டச் செயலாளராக 1943-ல் பொறுப்பேற்றார். கட்சியை வளர்க்கப் பல உத்திகளைக் கையாண்டார். மக்கள் நடமாட்டமுள்ள இடத்தில் கரகாட்டக் கலைஞர் பொன்னுத்தேவரை ஆடவைப்பார். கூட்டம் சேர்த்ததும் கட்சிக் கொள்கைகளை விளக்கிப் பேசுவது அவற்றில் ஒரு உத்தி. கலை, இலக்கியத்தில் மிக அதிக ஆர்வம் கொண்ட சங்கரய்யாதான், முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அமைக்க வேண்டும் என்ற யோசனையைச் சொன்னவர்!

5. கம்யூனிஸ்ட் தோழர் பொன்னுச்சாமியின் மகள் நவமணியைத் திருமணம் (1947 செப்டம்பர் 18) செய்துகொண்டார். நவமணியின் சகோதரரும் சகோதரியும் கம்யூனிஸ்ட் இயக்க நாடகத்தில் நடித்தவர்கள். நவமணி கிறிஸ்தவர் என்பதால், குடும்பத்தில் சிலர் எதிர்த்தாலும் உறுதியாக நின்றார். தனது அரசியல் வாழ்க்கையில், தன் பிள்ளை, பேரக் குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கானோருக்கு சீர்திருத்த, சாதி மறுப்புப் திருமணங்களை நடத்திவைத்திருக்கிறார்.

6. மூன்று ஆண்டுகள் (1948-51) தலைமறைவுக் காலம். இந்தியாவில் எங்கெங்கெல்லாம் அவர் தலைமறைவாக இருந்தார் என்று பட்டியல் போட்டால் நீளும். சலவைத் தொழிலாளி வீட்டில் அழுக்கு மூட்டைகளுக்கு நடுவில் மாதக்கணக்கில் பதுங்கியிருந்திருக்கிறார். தோல் நோய்கள் ஏற்பட்டாலும் மருத்துவரிடம்கூட போக முடியாத நிலை. பின்னாளில் எதற்கும் கலங்காதவராக நிற்க இந்தப் பயணமும் ஒரு காரணம்!

7. ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தபோது ‘ஜனசக்தி’ பொறுப்பாசிரியராக இருந்திருக்கிறார். 1963-ல் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ‘தீக்கதிர்’ தொடங்கப்பட்டபோது, அதில் கட்டுரைகள் எழுதிவந்த அவர், 1966-ல் அது மார்க்சிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ இதழாக அறிவிக்கப்பட்டபோது அதன் ஆசிரியரானார்!

8. முதன்முறையாக 1957 தேர்தலில் மதுரை கிழக்குத் தொகுதி தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். 1962-லும் தோல்வி. 1967-ல் மதுரை மேற்குத் தொகுதியில் முதன்முறையாக வெற்றிபெற்றார். அடுத்தடுத்து நடந்த 1977, 1980 தேர்தல்களிலும் (மதுரை கிழக்கு) அவர் வென்றார்.

9. சாதிக் கலவரங்கள், மதக் கலவரங்களின்போது அமைதியை உருவாக்க களப் பணியாற்றினார். 1998-ல் கோவையில் மதநல்லிணக்கப் பேரணியை (1998) நடத்தினார். மதவாத சக்திகளுக்கு எதிராக கம்யூனிஸ்ட்களும், தேச பக்தர்களும் கடமையாற்ற அழைத்தார். 1997-ல் மதுரையில் முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில் தீவிர நிலச் சீர்திருத்தமே தீர்வு என்று முழங்கினார்!

10. கட்சியில் ‘இரும்பு மனிதர்’ என்ற பெயர் சங்கரய்யாவுக்கு உண்டு. ஆனால், சங்கரய்யாவைக் கலங்கவைக்கும் பாடலும் உண்டு. டி.மணவாளன் எழுதிய ‘விடுதலைப் போரினில் வீழ்ந்த மலரே, தோழா’ பாடலைக் கேட்டால் கட்சித் தோழர்களின் தியாகத்தை நினைத்து அழுதுவிடுவார். அவரது கொள்கைப்பிடிப்பு, எளிய வாழ்க்கை, பண்பான நடத்தை ஆகியவற்றால் இன்றைக்கும் என்றைக்கும் எண்ணற்ற இளையோரை வசீகரிப்பவர் சங்கரய்யா.

தமிழகத்துக்கு ஆற்றிய தொண்டினைப் போற்றும் விதமாக அவருக்கு அரசு மரியாதையுடன் பிரியாவிடை அளிக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மறைந்த சங்கரய்யாவுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.

முதல்வர் ஸ்டாலின்: பொதுத் தொண்டே வாழ்க்கையென வாழ்ந்த இச்செஞ்சட்டைச் செம்மலுக்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மூலமாக மதிப்புறு முனைவர் பட்டம் வழங்க ஆவன செய்யப்படும் என இந்த ஆண்டு ஜூலை 15 அன்று நான் அறிவிப்பு செய்திருந்தும், தமிழகத்தின் விடுதலைப் போராட்ட வரலாற்றை அறியாத, குறுகிய மனம் படைத்த சிலரது சதியால் அது நடந்தேறாமல் போனதை எண்ணி இவ்வேளையில் மேலும் மனம் வருந்துகிறேன். தகைசால் தமிழர், முனைவர் மட்டுமல்ல, அவற்றிற்கும் மேலான சிறப்புக்கும் தகுதி வாய்ந்த போராளிதான் தோழர் சங்கரய்யா.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி: எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் பேரன்பைப் பெற்ற சங்கரய்யா, விடுதலைப் போராட்டத்துக்காக தனது கல்லூரிப் படிப்பை துறந்ததோடு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய தலைவர்களில் ஒருவராகவும், மாணவர் அமைப்பு முதல் வயது முதிர்வு வரையிலும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டவர். பல்வேறு போராட்டங்களை நடத்தி, தொழிலாளர்களின் உற்ற தோழனாகவும் விளங்கியவர். மேலும் சாதி வர்க்கம், ஆதிக்கம், அடக்குமுறைகளை தனது வாழ்நாள் முழுவதும் எதிர்த்து வாழ்ந்தவர்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: தோழர் சங்கரய்யாவின் வாழ்க்கை வரலாறும், அரசியலில் அவர் கடைபிடித்த நேர்மையும், ஒழுக்கமும் இன்றைய தலைமுறையினர் தெரிந்து கொள்ளப்பட வேண்டியதாகும். அத்தகைய சிறப்பு மிக்க தலைவரின் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த இடதுசாரி இயக்கங்களுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.

காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி: தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், தொழிலாளர் வர்க்கத்துக்காகவும் தமது வாழ்நாள் முழுவதும் உரிமைக் குரல் எழுப்பி பல்வேறு போராட்டங்களை நடத்தி பலமுறை சிறை புகுந்தவர். எளிமையான வாழ்க்கையை மேற்கொண்டு மக்களோடு மக்களாக தொண்டால் பொழுதளந்த தூய்மையான தலைவர். தமிழகத்தில் கம்யூனிஸ்ட் இயக்கம் வளர்வதற்கு தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: பல்வேறு சிறப்புக்களின் கொள்கலனாக திகழ்ந்த பெருமைக்குரிய லட்சியப் போராளியான என்.சங்கரய்யாவின் மறைவு நம் அனைவருக்கும் பேரிழப்பாகும். ஜனநாயகம் காக்கவும், மதச்சார்பின்மை மதநல்லிணக்கம் பேணவும், தொழிலாளர் உரிமைகளை வென்றெடுக்கவும் களத்தில் நிற்கும் அனைவருக்கும் நாடு முழுக்க உள்ள தோழர்களுக்கும் போராளித் தலைவர் சங்கரய்யாவின் பிரிவு அளவு கடந்த துயரத்தை அளிக்கிறது.

இந்திய கம்யூ. மாநில செயலாளர் இரா.முத்தரசன்: ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் மதுரை மாவட்டத்திலும், சுற்று வட்டாரத்திலும் கட்சி அமைப்புகளையும், விவசாயிகளையும், விவசாயத் தொழிலாளர்களையும் அமைப்பு ரீதியாக திரட்டி போராடியவர். நாட்டின் விடுதலைப் போராட்டம் மற்றும் மக்கள் நலப் போராட்டங்களில் பங்கேற்று பலமுறை சிறைச் சென்றவர். சிறு வயது தொடங்கி இறுதி மூச்சு சுவாசித்த காலம் வரை நெறி சார்ந்து வாழ்ந்து பொது வாழ்விற்கு முன்னுதாரணமாக திகழ்ந்தவர் தோழர். என்.சங்கரய்யா.

விசிக தலைவர் திருமாவளவன்: எளிய வாழ்க்கை, சமரசமற்ற கொள்கைப் பற்று, அடக்குமுறைக்கு அஞ்சாத போர்க்குணம் ஆகியவற்றுக்கு சான்றாகத் திகழ்ந்தவர் சங்கரய்யா. காமராஜர், அண்ணா, எம்ஜிஆர், கருணாநிதி எனத் தமிழகத்தின் பல்வேறு மூத்த தலைவர்களோடு அரசியல் பணியாற்றியவர். விளிம்பு நிலை மக்களின் உரிமைகளுக்காக சமரசம் இன்றிப் போராடியவர். தோழர் என்.சங்கரய்யாவை அரசு மரியாதையோடு நல்லடக்கம் செய்வதுடன், அவரது நினைவாக சென்னையில் மணிமண்டபம் ஒன்றை அரசு அமைக்க வேண்டும்.

முன்னாள் முதலவர் ஓ.பன்னீர்செல்வம்: எளிமையான வாழ்க்கை முறையை கடைபிடித்ததோடு, கதர் ஆடை அணிவதை வழக்கமாகக் கொண்டிருந்தவர். அனைவரிடத்திலும் அன்போடும், பண்போடும் பழகக்கூடியவர். எளிமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர் சங்கரய்யா என்று சொன்னால் அது மிகையாகாது. அவருடைய இடத்தை இனி யாராலும் நிரப்ப முடியாது. அவரது இழப்பு தமிழகத்துக்கு மட்டுமல்ல தனிப்பட்ட முறையில் எனக்கும் பேரிழப்பு ஆகும்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உருவான போது இருந்த 36 தலைவர்களில் சங்கரய்யாவும் ஒருவர் என்பது குறிப்படதக்கது. பெருந்தலைவர் காமராஜர், மக்கள் தலைவர் மூப்பனார் ஆகியோருடன் அன்பாக பழகியவர். தமிழகத்தில் மறைந்த மூத்த அரசியல் தலைவர்கள் மற்றும் சுதரந்திர போராட்ட வீரர்களோடு இணைந்து மக்கள் பணியாற்றிய பெருமை சங்கரய்யாவையே சேரும்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்தேன். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் தேமுதிக சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: இந்திய சுதந்திர போராட்டம், தீண்டாமைக்கு எதிரான போராட்டம், அடித்தட்டு மக்களுக்கான போராட்டம், விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டம் என தன் வாழ்க்கையின் பெரும்பகுதியை சிறையிலேயே கழித்த அப்பழுக்கற்ற பொதுவாழ்வின் தலைவர் தோழர் என்.சங்கரய்யாவின் இழப்பு கம்யூனிஸ்ட் இயக்கம் மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்திய நாட்டிற்குமான பேரிழப்பாகும். இவ்வாறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.