பாஜகவுடன் கூட்டணி வைக்காமல் அதிமுகவால் தமிழகத்தில் வெற்றி பெற முடியாது: ஓபிஎஸ்

பாஜகவோடு கூட்டணி வைக்காமல் அதிமுகவால் தமிழகத்தில் வெற்றி பெற முடியாது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

அதிமுக பொதுச்செயலாளராக மாறி அக்கட்சியை முழுவதுமாக தன்வசம் கொண்டு வந்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற மற்ற தலைவர்களையும், நிர்வாகிகளையும் வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்வேன்.. ஆனால், ஓபிஎஸ், சசிகலா, தினகரன் ஆகியோரை மட்டும் சேர்த்துக் கொள்ள மாட்டேன் என்பதில் உறுதியாக இருக்கிறார். ஆனால், தினகரன், ஓபிஎஸ், சசிகலா உள்ளிட்ட தலைவர்களை நீக்கியுள்ளதால் எடப்பாடி பழனிசாமி மீது முக்குலத்தோர் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், ஓபிஎஸ் – தினகரன் இணைந்து தேர்தலை சந்தித்தால், அவர்களால் வெற்றி பெற முடியாது என்றாலும் கூட, அவர்கள் பிரிக்கும் ஓட்டுகள் அனைத்தும் அதிமுகவின் வாக்குகள் என்பது அனைவருக்கும் தெரியும். இப்படி அதிமுகவின் வாக்குவங்கியில் பெரிய ஓட்டை விழுவது தெரிந்திருந்தும், தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இதனிடையே, ஓபிஎஸும், தினகரனும் அதிமுகவில் இணைவதற்காக திரைமறைவில் காய்நகர்த்தி வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. குறிப்பாக, ஓபிஎஸ் பல முறை எடப்பாடி பழனிசாமிக்கு தூது அனுப்புவதாகவும் தகவல் வெளியாகி வந்தது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வத்திடம் இதுகுறித்து நிருபர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த ஓபிஎஸ், “நான் எடப்பாடி பழனிசாமிக்கு தூது அனுப்புவதாக பரவும் செய்திகள் வடிகட்டின பொய். அவருக்கு தூது அனுப்ப எனக்கு அவசியம் இல்லை. இன்றைய சூழலில் பாஜகவுடன் கூட்டணியில் இருந்தால் மட்டுமே அதிமுகவால் வெற்றி பெற முடியும். அதுவும், ஒன்றுபட்ட அதிமுகவாக இருந்தால் மட்டும்தான் தேர்தல் வெற்றி சாத்தியம். இல்லையென்றால், யாருடன் கூட்டணி வைத்தாலும் அவர்களால் ஜெயிக்க முடியாது. நானும், டிடிவி தினகரனும் ஓரணியில் தான் இருக்கிறோம். எங்களுடன் இணைவது குறித்து சசிகலா தான் முடிவு செய்ய வேண்டும்” என ஓபிஎஸ் கூறினார்.

இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து இருப்பதாவது:-

கவர்னர் மாளிகைமீது பெட்ரோல் வெடி குண்டு தாக்குதல், சென்னை கோவிந்தப்ப நாயக்கன் தெரு சந்திப்பில் அமைந்துள்ள ஸ்ரீ வீரபத்ர சுவாமி கோவில்மீது குண்டு வீச்சு, சென்னையில் உணவக மேலாளர் ரவுடிகளால் அடித்துக் கொலை என்ற வரிசையில் சென்னை கொடுங்கையூர், ஆர்.ஆர். நகரில், குடியிருப்புகளுக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த இருபதுக்கும் மேற்பட்ட ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகனங்கள் ரவுடிகளால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. சூறையாடப்பட்ட வாகனங்களை சரி செய்யவே இலட்சக்கணக்கான ரூபாய் ஆகும் என்று பாதிக்கப்பட்ட வாகன உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தி.மு.க. அரசால் திணிக்கப்படும் தொடர் நிதிச் சுமை ஒருபுறம் என்றால், மறுபுறம் சட்டம் ஒழுங்கின்மை காரணமாக கூடுதல் நிதிச் செலவு ஏழை, எளிய மக்களுக்கு ஏற்படுகிறது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், பொதுமக்களின் உயிருக்கும், உடைமைக்கும் உத்தரவாதம் இல்லாத சூழ்நிலை தமிழ்நாட்டில் நிலவுகிறது. எப்பொழுது என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் மக்கள் உறைந்து போயுள்ளனர். காவல் துறையிடம் உள்ள அச்சம் ரவுடிகளிடையே நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. இதற்குக் காரணம், ரவுடிகளை தி.மு.க. அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்காததுதான் என்று மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு சட்டம் ஒழுங்கு இன்றியமையாதது என்பதைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், பொதுமக்கள் அச்சமின்றி வாழக்கூடிய நிலைமையை உருவாக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.