பாஜக அல்லாத மாநிலங்களில் உயர்கல்வியை சீரழிக்கிறது ஒன்றிய பாஜக அரசு: திருமாவளவன்

உயர்கல்வியிலும், ஆராய்ச்சிக் கல்வியிலும் இந்தியாவிலேயே முதலிடம் வகிக்கும் மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது என திருமாவளவன் கூறியுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

பல்கலைக்கழக வேந்தர்களாக முதலமைச்சரை நியமித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 சட்ட மசோதாக்களைக் காரணம் ஏதும் குறிப்பிடாமல் ஆளுநர் திருப்பி அனுப்பியிருந்தார். அவற்றை மீண்டும் சட்டப் பேரவையில் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காகத் தமிழ்நாடு அரசு இன்று அனுப்பியுள்ளது. அவற்றை, உச்சநீதிமன்றம் உத்தரவிடும்வரை மீண்டும் கிடப்பில் போட்டு வைக்காமல் தமிழ்நாடு ஆளுநர் உடனே ஒப்புதல் அளிக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

இந்தியாவில் உயர்கல்வி பயிலும் மாணவர்களில் கிட்டத்தட்ட 85% பேருக்கு மாநில அரசுகள் உருவாக்கிய பல்கலைக்கழகங்கள்தாம் உயர்கல்வியை வழங்குகின்றன என 2019-20 ஆம் ஆண்டுக்கான உயர்கல்வி குறித்த அனைத்திந்திய ஆய்வறிக்கை (AISHE) தெரிவிக்கிறது. உயர்கல்வியிலும், ஆராய்ச்சிக் கல்வியிலும் இந்தியாவிலேயே முதலிடம் வகிக்கும் மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது. அதுமட்டுமின்றி இந்தியாவின் முதன்மையான 100 பல்கலைக்கழகங்களில் தமிழ்நாட்டிலுள்ள 9 மாநில அரசுப் பல்கலைக்கழகங்கள் இடம் பிடித்துள்ளன.

மாநில அரசுகள் தமது நிதியைக்கொண்டு உருவாக்கும் பல்கலைக்கழகங்களுக்கு வேந்தராக ஆளுநரை நியமிக்க வேண்டுமென எந்த சட்ட நிர்ப்பந்தமும் கிடையாது. அரசமைப்புச் சட்டம் வரையறுத்திருக்கும் ஆளுநரின் பணிகளில் பல்கலைக்கழக வேந்தராக இருக்க வேண்டும் எனக் குறிப்பிடப்படவில்லை. தனியார் நடத்தும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் அவற்றின் உரிமையாளர்கள்தான் வேந்தர்களாக உள்ளார்கள். அவற்றில் ஆளுநருக்கு எந்த வேலையும் கிடையாது.

இந்தியா சுதந்திரமடைந்தபின் மத்தியிலும் மாநிலங்களிலும் ஒரே கட்சியே ஆட்சி செய்ததால் ஆளுநர்களை வேந்தர்களாக நியமிக்கும் மரபு அறிமுகமானது. அதன் பிறகு ஆட்சிக்கு வந்த கட்சிகளும் அதே மரபைப் பின்பற்றி வந்தன. அதையே வாய்ப்பாக வைத்து ஆளுநர்களைப் பயன்படுத்தி பாஜக அல்லாத மாநிலங்களில் உயர்கல்வியை சீரழிக்கிறது ஒன்றிய பாஜக அரசு.

குஜராத் முதலமைச்சராக நரேந்திர மோடி இருந்தபோது குஜராத்தில் இருக்கும் 14 மாநில அரசுப் பல்கலைக்கழகங்களில் அப்போது வேந்தராக இருந்த ஆளுநரை நீக்கிவிட்டு முதலமைச்சரான தன்னை வேந்தராக நியமித்து சட்டம் இயற்றினார். அதற்கு காங்கிரஸால் நியமிக்கப்பட்டிருந்த ஆளுநர் கமலா பெனிவால் ஒப்புதல் தரவில்லை. மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பாஜகவைச் சேர்ந்த ஓ.பி.கோலி குஜராத்தின் ஆளுநர் ஆனதும் 2015 இல் அந்த சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் தந்தார். இப்போது முதலமைச்சர்தான் அங்கே வேந்தராக உள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று வெளிநடப்புச் செய்த பாஜக எம்.எல்.ஏக்கள் குஜராத்தில் மோடி எடுத்த நடவடிக்கை தவறு என்கிறார்களா?

மத்திய – மாநில உறவுகளை ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட ஆணையங்கள் ஆளுநரை வேந்தராக நியமிக்க வேண்டாம் என்றுதான் பரிந்துரை செய்துள்ளன. அரசியலமைப்புச் சட்டத்தால் முன்வைக்கப்படாத ‘பல்கலைக்கழக வேந்தர்’ முதலான அதிகாரங்களை ஆளுநருக்கு வழங்குவதை மாநில சட்டமன்றங்கள் தவிர்க்க வேண்டும் என்று சர்க்காரியா கமிஷன் பரிந்துரைத்துள்ளது. ஆளுநரை வேந்தராக நியமிப்பதால் வீண் சர்ச்சைகளுக்கும், பொது மக்களின் விமர்சனங்களுக்கும் அவர் ஆளாக நேரிடும் என பூஞ்சி கமிஷன் தெரிவித்துள்ளது. எனவே, ஆளுநரை பல்கலைக்கழக வேந்தராக நியமிப்பதில்லை என்ற தமிழ்நாடு அரசின் முடிவு அரசியல் சட்டப்படி சரியானது; மாநிலத்தின் கல்வி வளர்ச்சிக்கு உதவக்கூடியது. இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்று ஆதரிக்கிறோம். தமிழ்நாடு ஆளுநர் இப்போதாவது தனது அதிகாரம் என்னவென்பதைப் புரிந்துகொண்டு இந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் தரவேண்டும் என வலியுறுத்துகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.