அண்ணாமலைக்கு அரசியலே இல்லையே: சீமான்

“எனக்கு அரசியல் தான் தெரியல.. என் தம்பி அண்ணாமலைக்கு அரசியலே இல்லையே” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர்கள் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா நடித்துள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தை சீமான் நேற்று கண்டு களித்தார். இதையடுத்து, அங்கிருந்த செய்தியாளர்களை அவர் சந்தித்து பேசினார். அப்போது, “உங்களுக்கு அரசியல் புரிதல் இல்லை என்று அண்ணாமலை கூறியிருக்கிறாரே” என நிருபர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்து சீமான் கூறியதாவது:-

அண்ணாமலை அப்படி சொல்லிருக்காரா.. ஒருவேளை இருக்கலாம். ஏதோ சொல்லணும்னு சொல்லிருக்காரு. எனக்கு அரசியல் புரிதல் தான் இல்ல. என் தம்பி அண்ணாமலைக்கு அரசியலே இல்லையே. அவரை என்ன பண்ண சொல்றீங்க? என்னால சுதந்திரமாக பல விஷயங்களை பேச முடியுது. அவருக்கு அப்படி பேச முடியுமா? நானும் அண்ணாமலையும் தர்க்கம் செய்வோம். இந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் ஏதாவது ஒரு சாதனையை அவரால் சொல்ல முடியுமா? எதை பத்தியும் பேச முடியாது. சும்மா இங்க வேணும்னா, திமுக ஊழல் பண்ணிருச்சி. சட்டம் ஒழுங்கு சரியில்லைனு சொல்லலாம். சரி.. அதிமுக செய்த ஊழலை பற்றி அவரால பேச முடியுமா? எதை பற்றியாவது பேச பாஜகவுக்கு தகுதி இருக்கா?

அன்றைக்கு எல். முருகனிடம் ஒரு விஷயத்தை பத்தி கேக்குறாங்க. ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம்னு கத்திட்டு போறாரு. அவ்வளவுதான் அவங்களால செய்ய முடியும். ஏதோ ராமரை பாஜகவோட தலைவர் மாதிரி பேச வேண்டியது. கடவுள் வணக்கத்தை அரசியல் முழக்கமாக மாற்ற நினைக்கும் அவங்களுக்கு போய் நான் பதில் சொல்ல வேண்டுமா? என்று சீமான் கேள்வியெழுப்பினார்.

முன்னதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வ.உ.சிதம்பரனாரின் நினைவு நாளையொட்டி அவரது உருவப்படத்துக்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினார். பின்னர் சீமான் கூறியதாவது:-

மக்களாட்சி என்பதற்கு ஏற்ப இங்கு என்ன நடக்கிறது. அனைத்தும் தேர்தல் அரசியலும், கட்சி அரசியலும்தான் நடக்கிறது. மக்களுக்கான அரசியல் எங்கு நடக்கிறது. இங்கு சேவை அரசியல், செயல் அரசியல் இருக்கிறதா? செய்தி அரசியல் மட்டும்தான் இருக்கிறது.

கவர்னரை மாற்ற வேண்டும் என்கின்றனர். ஆனால் கவர்னர் பதவியை தூக்க வேண்டும் என்கிறேன். கவர்னர் பதவி அவசியம் இல்லை. பள்ளி நேரங்களில் அதிக பஸ்களை இயக்க வேண்டும். நகர்புறங்களில் பஸ்களை தவிர்த்து விட்டு மினி பஸ்களை அதிகம் விடவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அவரிடம் நிருபர்கள், “உலக கோப்பையை இந்தியா வெல்லுமா?” என்று கேட்டதற்கு, நடிகர் விஜய் பாணியில், “கப் முக்கியம் பிகிலு” என்று கூறிய சீமான், “முன்பு கிரிக்கெட்டை ரசித்து பார்த்தேன். தற்போது இல்லை. வீரர்களை எப்போது ஏலம் எடுத்தார்களோ அப்போதே அது ஆன்லைன் சூதாட்டம் ஆகிவிட்டது” என்றார்.