சுரங்க தொழிலாளர்களின் மனஉறுதியை பேணுவது முக்கியம்: பிரதமர் மோடி

சுரங்கப் பாதையில் சிக்கியவர்களின் மனஉறுதியைப் பேணுவது முக்கியம் என்று உத்தராகண்ட் முதல்வரிடம் தொலைபேசியில் பேசியபோது பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

உத்தராகண்டில் சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக உத்தரகாசி, யமுனோத்ரியை இணைக்கும் வகையில் சில்க்யாரா வளைவு – பர்காட் இடையே 4.5 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 12-ம் தேதி அதிகாலை 4 மணி அளவில் 60 மீட்டர் தொலைவு சுரங்கப் பாதையில் மண் சரிந்தது. இருபுறமும் மணல் மூடிய நிலையில் சுரங்கப் பாதைக்குள் 41 தொழிலாளர்கள் சிக்கி உள்ளனர். பல்வேறு துறைகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட நிபுணர்கள் இரவு பகலாக மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியிடம் தொலைபேசியில் பேசி உள்ளார். இது தொடர்பாக உத்தராகண்ட் முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

தொழிலாளர்கள் சுரங்கப் பாதையில் சிக்கியதை அடுத்து மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் புஷ்கர் சிங் தாமியிடம் தொலைபேசியில் பேசினார். அப்போது மீட்புப் பணிகளின் நிலை குறித்து கேட்டறிந்தார். சுரங்கப் பாதையில் சிக்கி உள்ள தொழிலாளர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என்றும், போதுமான உதவிகளை மத்திய அரசு வழங்கும் என்றும் அப்போது பிரதமர் கூறினார். மத்திய – மாநில அதிகாரிகளிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதன் மூலம் போதுமான உதவிகள் கிடைக்கப் பெறுவதை உறுதி செய்து கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார். சுரங்கப்பாதையில் சிக்கி உள்ள தொழிலாளர்களின் மன உறுதியைப் பேணுவது மிகவும் முக்கியம் என பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

இந்த உரையாடலின்போது, தொழிலாளர்களுக்கு போதுமான அளவு ஆக்ஸிஜன், சத்தான உணவு, குடிநீர் ஆகியவை தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதை பிரதமருக்கு முதல்வர் தெரிவித்தார். நிபுணர்களின் கருத்துக்களின் அடிப்படையில் மீட்புப் பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருவதையும் முதல்வர் எடுத்துரைத்தார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் உத்தரகண்ட்டில் சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், அங்கே சென்றுள்ள அமைச்சர்களுக்குச் சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

தொழிலாளர்களை மீட்கும் பணிகள் 190 மணி நேரத்தைக் கடந்து 9ஆவது நாளாகத் தொடர்கிறது. உள்ளே இருப்பவர்களுக்கு மிகக் குறைந்த உணவு மற்றும் தண்ணீர் மட்டுமே இருக்கிறது. நாட்கள் செல்ல செல்ல அவர்கள் உடல்நலம் மோசமாகும் என்று கவலை எழுந்துள்ளது. இதுவரை தொழிலாளர்களை மீட்க பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்ட போதிலும் அதற்குப் பெரியளவில் பலன் கிடைக்கவில்லை. மேலும், மீட்புப் பணிகள் ஏற்படும் போது கூடுதலாக மண் சரிவு ஏற்பட்டால் நிலைமை மேலும் மோசமாகும் என்பதால் மீட்புப் படையினர் அதிலும் கவனமாக இருக்கிறார்கள். சுரங்கப்பாதையின் மேலிருந்து செங்குத்தாகத் துளையிட்டு அவர்களை மீட்கும் திட்டத்தை அதிகாரிகள் கையில் எடுத்துள்ளனர். மீட்புப் பணிகள் துரிதமாக நடந்து வரும் நிலையில், இன்று அமைச்சர் நேரடியாக மீட்புப் பணிகளைப் பார்வையிட்டனர். அப்போது அவர்களுக்குச் சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டது தான் இப்போது சர்ச்சையாகியுள்ளது.

அதாவது மீட்புப் பணிகளை ஆய்வு செய்ய மத்திய அமைச்சர் கட்கரி, முதல்வர் புஷ்கர் சிங் தாமி உள்ளிட்டோர் அங்கே வந்துள்ள நிலையில், அவர்களுக்குச் சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களின் சேர்களுக்கு கவர் போடப்பட்டுள்ளனர். மேலும், தற்காலிக பந்தலையும் புதிதாக அமைத்துள்ளனர். மீட்புப் பணிகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், அதைக் கவனிக்காமல் இப்படி அமைச்சர்களுக்குச் சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டதாக நெட்டிசன்கள் பலரும் சாடிவருகின்றனர்.