சீமான் மீதான எனது புகார் குறித்து குஷ்பு ஏன் விசாரணைக்கு பரிந்துரைக்கவில்லை: விஜயலட்சுமி

நடிகை திரிஷா விவகாரத்தில் மன்சூர் அலிகான் மீது பெண்கள் ஆணைய விசாரணைக்கு பரிந்துரைத்த பாஜக நடிகை குஷ்பு, சீமான் மீதான தமது புகார்கள் குறித்து ஏன் பெண்கள் ஆணைய விசாரணைக்கு பரிந்துரைக்கவில்லை என நடிகை விஜயலட்சுமி கேள்வி எழுப்பியுள்ளார்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தம்மை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றிவிட்டார் என்பது நடிகை விஜயலட்சுமியின் புகார். 11 ஆண்டுகளுக்கு முன்னரும் இதேபோல ஒரு புகார் கொடுத்தார் நடிகை விஜயலட்சுமி. கடந்த ஆகஸ்ட் மாதமும் சீமான் மீது மீண்டும் புகார் கொடுத்தார் விஜயலட்சுமி. ஆனால் திடீரென தமது புகார்களை போலீசிடமிருந்து விஜயலட்சுமி வாபஸ் பெற்றுக் கொண்டார்.

இந்நிலையில் நடிகை திரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் கருத்து தெரிவித்த விவகாரம் பெரும் சர்ச்சையானது. நடிகை திரிஷா தொடங்கி பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். பாஜகவை சேர்ந்த நடிகை குஷ்பு, தேசிய பெண்கள் ஆணையத்தின் விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளேன் எனவும் கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த மன்சூர் அலிகான், நடிகை திரிஷா குறித்து தாம் அவதூறாக எதுவும் பேசவில்லை. தாம் பேசியதை திரித்து போட்டு காட்டியுள்ளனர். நான் வரும் தேர்தலில் பிரபல அரசியல் கட்சியில் இணைந்து போட்டியிடுவதை தடுக்க இத்தகைய அவதூறுகளை பரப்புகின்றனர் என்றார்.

இந்த நிலையில் நடிகை விஜயலட்சுமி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் விஜயலட்சுமி கூறியிருப்பதாவது:-

இன்றைக்கு திரிஷா குறித்து மன்சூர் அலிகான் சொன்னது ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வரைக்கும் போயிருக்கிறது. குஷ்பு, பெண்கள் ஆணையத்தில் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்க வைப்பேன் என்கிறார். அடேங்கப்பா! பெண்களுக்கு என்னா பாதுகாப்பாக இருக்காங்க.. ஆனால் ஒரு விஷயம் எனக்கு புரியவில்லை. கடந்த ஆகஸ்ட் மாதம் நானும் வீரலட்சுமியும் சீமான் மீது புகார் கொடுத்தோம். அப்போது சீமானும் நாம் தமிழர் கட்சியும் என்னையும் வீரலட்சுமியையும் ரொம்பவே கொச்சைபடுத்தி பேசினாங்க.. எங்க இரண்டு பேரையும் திமுகவின் விபச்சாரிகள் என்றெல்லாம் சொன்னாங்க.. வீரலட்சுமியை வெட்டியே போடுவேன் என்று சொன்னாங்க.. இப்படி ஒன்றா? இரண்டா? இதில் மன அழுத்தம் ஏற்பட்டு குஷ்பு மேடத்துக்கு வீடியோ கால் போட்டே சொன்னேன்.. எங்க இருவருக்கும் விபச்சாரி பட்டமே கட்டுறாங்க.. தயவு செய்து என்னன்னு பாருங்கன்னு சொன்னேன்.. குஷ்பு மேடம் கண்டுக்காம விட்டுட்டாங்க.. ஒருவேளை பாஜகவுக்கு ஒரு பிரச்சனைன்னா சீமான் குரல் கொடுக்கிறார் என்பதாலா? மொத்தத்துல எந்த ஒரு பெண்ணுக்கும் பிரச்சனைன்னா நிற்போம் அப்படின்னு சொல்லக் கூடாது.. எந்த ஒரு பெண்ணுக்கும் பிரச்சனைன்னா தைரியாம குரல் கொடுப்பது பெரியாரிஸ்ட்டுகள்.. இன்றைக்கும் விஜயலட்சுமிக்கும் வீரலட்சுமிக்கும் எதிராக சீமான் செய்வது தவறு என்று பெரியாரியக்க தோழர்கள்தான் குரல் கொடுக்கிறார்கள். பெரியாரிஸ்டுகளால்தான் தமிழ்நாட்டில் பெண்களுக்கு பெரிய பாதுகாப்பு என நான் கருதுகிறேன் என்பதையும் இந்த வீடியோ மூலமாக தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.