சேட்டுக்கிட்ட கடன் வாங்குனா மட்டும் ஒழுங்கா கட்டுறீங்க: அமைச்சர் துரைமுருகன்

“சேட்டுக்கிட்ட கடன் வாங்குனா மட்டும் ஒழுங்காக கட்டி விடுகிறீர்கள்; கூட்டுறவு வங்கிகளிடம் கடன் வாங்கினால் மட்டும் அதை கட்ட மறுக்கிறீர்களே ஏன்?” என்று மக்களை பார்த்து அமைச்சர் துரைமுருகன் கேள்வியெழுப்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கும் வங்கிகளாக கூட்டுறவு வங்கிகள் விளங்குகின்றன. இதனால் நகைகளை அடமானம் வைத்து கடன் வாங்குவது; நிலத்தை காண்பித்து கடன் வாங்குவது என விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்துக்காக கூட்டுறவு வங்கிகளிடம் இருந்து பணம் பெற்று வருகிறார்கள்.
இதனிடையே, சில விவசாயிகள் இந்தக் கடனை அடைப்பதில்லை என வங்கிகள் சார்பில் தெரிவிக்கப்படுகின்றன. இதன் காரணமாக, வங்கிகளும் விவசாயிகளுக்கு கடன் கொடுக்க மறுப்பதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றன.

இந்நிலையில், வேலூரில் தமிழக அரசு சார்பில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் துரைமுருகன், இந்த விவகாரம் தொடர்பாக பேசினார். அவர் கூறியதாவது:-

கூட்டுறவு வங்கிகளிடம் இருந்து விவசாயிகள் ஏராளமாக கடன் வாங்குகிறீர்கள். ஆனால் கடனை திருப்பி அடைக்க மாட்றீங்க. அதே சமயத்தில், சேட்டுகிட்ட கடன் வாங்குனா மட்டும் கட் அண்ட் ரைட்டா அடைக்கிறீங்க. ஏன் அந்த மாதிரி கூட்டுறவு வங்கிகளிடம் வாங்கிய கடனை நீங்க அடைப்பதில்லை? அதை எப்படியும் தள்ளுபடி பண்ணிருவாங்கனு நினைப்பு உங்களுக்கு. இப்படி செய்தால் கூட்டுறவு வங்கிகள் எப்படி செயல்படும்? அதனால் கூடுமானவரை கடன் வாங்கியவர்கள் அந்தக் கடனை திரும்ப செலுத்த நினைக்க வேண்டும். இல்லாவிட்டால் எந்த நிர்வாகமும் செயல்பட முடியாது. ஒரு வகையில் இந்த பிரச்சினைகளுக்கு நாங்களும் காரணம் தான். எதற்கெடுத்தாலும் முதல்வர்கிட்ட போய், “நம்ம விவசாயிகள் ரொம்ப கஷ்டப்படுறாங்க. கடனை தள்ளுபடி பண்ணுங்கனு” நாங்க சொல்றோம். நகை வைக்கிறது நீங்க.. தள்ளுபடி பண்றது நாங்க. இப்படி இருந்தால் இந்த துறையை எப்படி மேம்படுத்த முடியும்? இவ்வாறு துரைமுருகன் கேள்வியெழுப்பினார்.