மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டு இப்பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்: பாரதிராஜா

த்ரிஷா விவகாரம் சோசியல் மீடியாவில் புயலை கிளப்பி வரும் நிலையில் இயக்குநர் பாரதி ராஜா மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மன்சூர் அலிகான் நடிகை த்ரிஷா குறித்து பேசியதற்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ், நடிகை குஷ்பு, மாளவிகா மோகன் என திரையுலக பிரபலங்கள் கண்டனம் தெரிவித்தனர். அதேபோல் நடிகர் சங்கம், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல அமைப்புகளும் கண்டனங்களை பதிவு செய்தன. இதையடுத்து, இன்று செய்தியாளர்களை சந்தித்த மன்சூர் அலிகான், நான் தப்பா பேசி இருந்தால் தானே மன்னிப்பு கேட்கணும்.. நான் என்ன மன்னிப்பு கேட்கிற ஜாதியா, நடிகர் சங்கம் இமாலய தவறை செய்துவிட்டது. என்னிடம் என்ன நடந்தது என்று விளக்கம் கேட்டு இருக்க வேண்டும், மேலும், நாசர், விஷாலுக்கு போன் செய்தேன் அவர்கள் என் அழைப்பை எடுக்கவில்லை என கூறியிருந்தார்.

இந்த விவகாரம் பூதாகரமாகி உள்ள நிலையில், இயக்குநர் பாரதி ராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியுள்ளதாவது:-

பெண்கள் சுயமாக வெளியுலகம் வரவும், சுய உழைப்பில் உயரவும் போராடும் காலம் இது. அப்படிப்பட்ட நேரத்தில் பெண்களைப் பற்றி யார் இழிவாக பேசினாலும் அது கண்டிக்கத்தக்கது. அதுவும் சினிமாவில் பெண்கள் என்றாலே ஒரு இளக்காரப் பார்வை பலரிடம் இருக்கிறது. ஆனால் பொதுவெளியை விட சினிமா இன்று பெண்களுக்கு நன்மதிப்பையும், உயர்ந்த நிலையையும், சமமாக அவர்களை மதிக்கும் நிலையையும் ஏற்படுத்தியிருக்கிறது, இக்காலகட்டங்களில் நம்மைச் சுற்றிப் போராடி வெல்லும் பெண்களுக்கு உறுதுணையாக, தூணாக நின்று வாழ்த்த வேண்டியது நம் அனைவரின் கடமை.

சில மேடைகள்.. சில பேட்டிகள்.. சில நேரங்கள், சில மனிதர்களின் சிந்தனையை.. நாவைப் புரட்டிப்போடும். நா கவனமும்.. மேடை நாகரீகமும் அனைத்து இடங்களிலும் மிக முக்கியமானது. நடிகர் திரு. மன்சூர் அலிகான் தனது பேட்டியில் நிதானித்திருக்க வேண்டும். விடும் வார்த்தைகள் மற்றவர்களை வலிக்கச் செய்யுமே என்பதை உணர்ந்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் வரம்பு மீறி நாம் மதிக்கும் ஒரு சக நடிகை பற்றி பேசியிருக்கிறார். இன்றைய திரையுலகை வேறு தளத்திற்கு கொண்டு செல்லும் கடமை நம் அனைவருக்கும் உள்ளது. சகக் கலைஞர்களைப் பற்றி பேசும்போது பொறுப்புணர்ந்து பேச வேண்டும். அவ்வாறு பொறுப்புணராமல், தடித்த வார்த்தைகளைப் பேசியதற்கு, நமது சங்கம் சார்பில் என் வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பாதிக்கப்பட்டவர் அவர் பேசியது தவறு. எனது நன்நிலையை அவ்வார்த்தைகள் பாதிக்கிறது என்று பாதிக்கப்பட்ட பெண்ணாக அவர் குரல் எழுப்பியுள்ள நிலையில், தானாக முன்வந்து திரு. மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்காதது சரியற்ற, முறையற்ற செயல். மன்னிப்பு கேட்பது மீசை மண்ணில் ஒட்டும் செயல் அல்ல. அது தன்னை மெருகேற்றிக்கொள்ள.. உணர்ந்துகொள்ள.. பெருந்தன்மையைக் கற்றுக் கொள்ள உதவும். சமயத்தில் அத்தன்மையே நம்மை பலமானவர்களாகவும் மாற்றும். திரு. மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டு இப்பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைப்பதே சிறந்த செயல் என்று நாங்கள் அனைவரும் கருதுகிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.