இஸ்லாமிய நாடுகளில் சைவ உணவுக்கு தடை விதிச்சா என்ன பண்ணுவீங்க?: சீமான்!

உத்தரப் பிரதேசத்தில் ஹலால் சான்றளிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் தடை செய்யப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சமீபத்தில் அறிவித்திருந்தார். இந்நிலையில், இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இஸ்லாமிய நாடுகளில் சைவ உணவுக்கு தடை விதித்தால் என்ன செய்வீர்கள் என கேள்வியெழுப்பியுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக அரசு ஆட்சி செய்து வருகிறது. இம்மாநிலத்தில் சிறுபான்மை மத்தினருக்கு எதிரான குற்றங்கள் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதாக புகார்கள் எழுந்திருக்கின்றன. இந்நிலையில், யோகி ஹாலால் உணவு முறை குறித்து உத்தரவு ஒன்றை வெளியிட்டிருந்தார். விலங்குகளை இறைச்சிக்காக வெட்டும் போது ஹலால் செய்யப்படுகிறது. இப்படி ஹலால் செய்யப்பட்ட உணவுகளை குறிப்பிட்ட மதத்தினர் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், ஹலால் செய்யப்பட்ட உணவு பொருட்களை தயாரிக்கவோ, சேமித்து வைக்கவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது என்று உத்தரப் பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு நாடு முழுவதும் கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக உ.பி அரசின் நடவடிக்கைக்கு சீமானும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

உத்தரப் பிரதேசத்தில் ஹலால் செய்யப்பட்ட உணவுப்பொருட்களுக்கு தடைவிதித்துள்ள அம்மாநிலத்தை ஆளும் பாஜக அரசின் நடவடிக்கை பெரும் அதிர்ச்சியளிக்கிறது. இசுலாமிய வெறுப்புப் பரப்புரையைத் தொடர்ச்சியாகக் கட்டவிழ்த்துவிட்டு, மதஒதுக்கலைச் செய்து வரும் பாஜக அரசின் மதவாதச் செயல்பாடுகளது நீட்சியாக, இசுலாமியர்கள் இறைச்சி உண்ணுவதற்காகச் செய்யப்படும் ஹலால் முறைக்குத் தடைவிதித்துள்ளது கடும் கண்டனத்திற்குரியது.

இந்திய நாட்டின் அடிநாதமான மதச்சார்பின்மையை முற்றாகக் குலைத்து, மதத்தால் நாட்டைத் துண்டாட முற்படும் பாஜக அரசின் சூழ்ச்சிச்செயலே இதுபோன்ற வகுப்புவாத நடவடிக்கைகளாகும். ஹலால் செய்யப்பட்ட இறைச்சி வகைகளால் உடலுக்கு எவ்விதத் தீங்குமில்லை என்பதோடு, அது சுகாதாரமானதும்கூட என்பதும் மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், அம்முறைக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையானது, இசுலாமிய மக்களின் உணவு உரிமையில் தலையிடும் கொடுஞ்செயலாகும்.

தாத்ரி எனும் பகுதியில் முகமது இக்லாக் எனும் முதியவரை மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் கூறி, அடித்தே கொலைசெய்த கொடூரம் அரங்கேற்றப்பட்ட உத்தரப் பிரதேச மாநிலத்தில், ஹலால் உணவுகளுக்கு தடைவிதிக்கப்பட்டிருப்பது அப்பட்டமான மதவெறியையே காட்டுகிறது. இசுலாமிய மதத்தை அரச மதமாக ஏற்று ஆட்சி நடத்தும் இசுலாமிய நாடுகளில்கூட பன்றி இறைச்சி உண்ணுவதற்கு எவ்விதத் தடையுமில்லை. அந்நாடுகளே மாற்று மதத்தவர்களின் நம்பிக்கைகளுக்கும், உணர்வுகளுக்கும் முழுமையாக மதிப்பளித்து நடக்கிறபோது, ஜனநாயக நாடு எனக் கூறப்படும் இந்தியப் பெருநாட்டில் இசுலாமிய மக்களின் உணவுப்பழக்க வழக்கத்திற்கு எதிரான இத்தகையக் கெடுபிடிகளும், தடைகளும் உலகரங்கில் இந்தியாவை வெட்கித் தலைகுனியச் செய்யும் இழிசெயலாகும். இசுலாமிய நாடுகளில் இதேபோல சைவ உணவுகளுக்கு கெடுபிடிகள் விதித்தால் என்னாகும்? என்பதை நாட்டையாளும் ஆட்சியாளர்கள் கொஞ்சமேனும் சிந்திக்க முன்வர வேண்டும்.

இந்திய நாட்டின் குடிமக்கள் யாவரும் தாங்கள் விரும்பிய மதத்தைத் தழுவிக் கொள்ளவும், அதன் கோட்பாடுகளைப் பின்பற்றவும் முழு உரிமைகள் உடையவராவர். இதனை இந்திய நாட்டின் அரசியலமைப்புச் சாசனம் அடிப்படை உரிமைகளாக வரையறுக்கிறது. சாதி, மதம் என எதன்பொருட்டும் எவ்விதப் பாகுபாடும் காட்டக்கூடாது என்றும் அறிவுறுத்துகிறது. ஆனால், பாஜக அரசு ஒன்றியத்தில் பொறுப்பேற்றது முதல் இசுலாமிய மக்களுக்கெதிரான மதவெறுப்புப் பரப்புரைகளும், கொடும் அவதூறுகளும், மதவெறிச் செயல்பாடுகளும் பன்மடங்கு அதிகரித்துள்ளன. அதனை ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசே ஆதரித்துத் துணைநிற்பது வெட்கக்கேடானது. இந்திய நாட்டின் விடுதலைக்காகப் பெரும் பங்காற்றி, இரத்தம் சிந்தி, உயிரை விலையாகக் கொடுத்து, அளப்பெரும் ஈகங்களைச் செய்திட்ட இசுலாமிய மக்களை இரண்டாந்தர குடிமக்களாக நடத்த முற்படும் பாஜக அரசின் தொடர் நடவடிக்கைகள் யாவும் இந்நாட்டின் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் படுபாதகச் செயலாகும். அதனை ஒருபோதும் ஏற்கவோ, அனுமதிக்கவோ முடியாது. ஆகவே, இசுலாமிய மக்கள் இறைச்சி உண்ணுவதற்காகச் செய்யப்படும் ஹலால் முறை மீதான தடையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமென உத்தரப் பிரதேசத்தை ஆளும் பாஜக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.