நல்ல கதாபாத்திரங்களில் நடிப்பதுதான் எனது நோக்கம்: வரலட்சுமி

கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் எனது கேரக்டர் பிடித்து இருந்தால் எப்படிப்பட்ட படத்திலும் நடிக்க தயாராக இருக்கிறேன் என்று வரலட்சுமி சரத்குமார் கூறினார்.

தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக உயர்ந்துள்ளார் வரலட்சுமி சரத்குமார். வில்லி மற்றும் குணசித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். இந்தநிலையில் வரலட்சுமி அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:-

எனக்கு அதிகமாக போலீஸ் கதாபாத்திரங்கள்தான் கிடைக்கின்றன. தமிழில் நிறைய படங்களில் அது மாதிரியான வேடங்களில் நடித்து இருக்கிறேன். நான் நடிக்கும் ஒவ்வொரு படமும் வித்தியாசமான கதையம்சத்தில் இருக்கும். படங்களில் ரசிகர்களுக்கு புதுமையான விஷயங்களை கொடுக்கவேண்டும் என்று விரும்புகிறேன். ஒரு படத்துக்கு கதைதான் ஹீரோ என்று நம்புகிறேன். நல்ல கதாபாத்திரங்களில் நடிப்பதுதான் எனது நோக்கம். வரலட்சுமி வித்தியாசமான வேடத்தில் நடித்தார் என்று ரசிகர்கள் பாராட்ட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் எனது கேரக்டர் பிடித்து இருந்தால் எப்படிப்பட்ட படத்திலும் நடிக்க தயாராக இருக்கிறேன். பொங்கலுக்கு நான் நடித்த ஹனுமான் படம் ரிலீசாக இருக்கிறது. கன்னடத்தில் சுதீப்புடன் இணைந்து மேக்ஸ் படத்தில் நடிக்கிறேன். மேலும் சில படங்களும் கைவசம் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.