அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் டிசம்பர் 4 வரை நீட்டிப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை டிசம்பர் 4 தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 11 ஆவது முறையாக அவருடைய நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமலாக்கத் துறையினரால் கடந்த ஜூன் 14ல் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி 120க்கும் மேற்பட்ட பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிக்கை மற்றும் 3 ஆயிரம் பக்கங்களை கொண்ட ஆவணங்களை டிரங்கு பெட்டியில் அமலாக்கத் துறையினர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அவரது ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இரு முறை தள்ளுபடி செய்த நிலையில், உயர் நீதிமன்றமும் (அக்டோபர் 19) தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் கடந்த 6ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி S.அல்லி முன்பு புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலமாக ஆஜர்படுத்தபட்டார். இதையடுத்து செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை, நவம்பர் 22ம்தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதன்மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் பத்தாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜி உடல்நல குறைவால் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவருடைய நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைந்தது. இதையொட்டி ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருந்து காணொலி மூலம் செந்தில் பாலாஜி, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பாக ஆஜார்படுத்தபட்டார். இதனையடுத்து செந்தல் பாலாஜி நீதிமன்ற காவலை டிசம்பர் 4 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். இன்று நீதிமன்ற காவல் நீட்டிப்பதன் மூலமாக செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 11 ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட போது அமலாக்கதுறை எடுத்துச் சென்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாத ஆவணங்களை அமலாக்கதுறை வசம் உள்ளதாகவும் அந்த ஆவணங்களை தங்களிடம் வழங்க கோரி செந்தில் பாலாஜி கடந்த விசாரணையின் போது தாக்கல் செய்யபட்டது. அந்த மனுவிற்கு அமலாக்க துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் என். ரமேஷ் இன்று பதில் மனு தாக்கல் செய்தார். அதில் இந்த வழக்கிற்கு தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யபட்டு குற்றம்சாட்டபட்ட செந்தில் பாலாஜிக்கு வழங்கபட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஆவணங்களை கோரிய மனு மீதான விசாரணை டிசம்பர் 4 தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி எஸ்.அல்லி உத்தரவிட்டார்.