‘சில நொடிகளில்’ படத்தின் மூலம் அஜித்துக்கு நெருக்கமாகிவிட்டேன்: யாஷிகா ஆனந்த்!

சில நொடிகளில் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய யாஷிகா ஆனந்த், நான் தீவிர அஜித் ரசிகை என்றார்.

கவலை வேண்டாம், துருவங்கள் பதினாறு ஆகிய படங்கள் மூலம் சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ள யாஷிகா ஆனந்த், கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான விவகாரமான இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் கவர்ச்சியில் மிரட்டும் யாஷிகா ஆனந்த்க்கு தனி ரசிகர்கள் கூட்டம் உருவானதால், அதே கவர்ச்சியை பயன்படுத்தி சினிமாவில் வாய்ப்புகளை பெற்றார். பின் விஜய் தொலைகாட்சியில் ஒளிப்பரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து வெகுஜன மக்களுக்கும் பிடித்த நடிகையானார். இதையடுத்து, கார் விபத்தில் சிக்கிய யாஷிகா இந்த விபத்தில் இருந்து பூரண குணமடைந்து தற்போது திரைத்துறையில் கவனம் செலுத்தி வருகிறார். இவரின் கைவசம் இவன் தான் உத்தமன், ராஜ பீமா, பாம்பாட்டம், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ஒருபடம் என கணிசமான படங்களை வைத்து இருக்கிறார். எஸ்.ஜே சூர்யாவுக்கு ஜோடியாக கடமை செய் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.

தற்போது இவர் சஸ்பென்ஸ் ஜானரில் உருவாகியுள்ள ‘சில நொடிகளில்’ நடித்துள்ளார். வினய் பரத்வாஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தில் ரிச்சர்ட் ரிஷி, புன்னகை பூ கீதா, யாஷிகா ஆனந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் வரும் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக நிலையில் படத்தின் புரமோஷன் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் பேசிய யாஷிகா ஆனந்த், நிஜத்தில் நான் ஒரு மாடல். அதே போல் இந்த படத்திலும் மாடல் அழகியாகவே நடித்து இருக்கிறேன். அதனால், இப்படத்தில் நடிப்பதற்கு ஈஸியாக இருந்தது. என்னுடைய முதல் படம் துருவங்கள் பதினாறு திரில்லர் திரைப்படமாகும். திரில்லர் படத்தின் மிகப்பெரிய ரசிகையான நான் ‘சில நொடிகளில் படத்தில் விரும்பி நடித்தேன். இப்படத்தில் நடித்ததன் மூலமாக ரிச்சர்ஸ் ரிஷி எனக்கு நல்ல நண்பர் ஆனார். மேலும், இதன் மூலமாக அஜித் சாருக்கும் நெருக்கமாகி விட்டேன். இந்த படத்தில் நடித்த ஒவ்வொருவரும் மிகவும் நன்றாக நடித்து இருக்கிறார்கள். இந்த படம் 24ந் தேதி வெளியாக இருக்கிறது அனைவரும் தவறாமல் பாருங்கள் என்று யாஷிகா ஆனந்த் கூறினார்.