மாநில அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும்: வானதி சீனிவாசன்

மாநில அரசும் மக்களுக்காக பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

கோவை மாவட்ட பாஜக அலுவலகத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மக்களின் நலன் கருதி மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்து தங்களது வரி வருவாயை குறைத்துள்ளது. அது போல், மாநில அரசும் மக்களுக்காக பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும். தமிழக அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்காது என்று தமிழக முதல்வர் பிடிவாதம் பிடித்து வருகிறார்.
மாநில அரசு தங்களது வரி வருவாயை குறைக்காமல் மத்திய அரசை குறை கூறி வருவதில் எந்த நியாமுமில்லை.

அதேபோல் மத்திய அரசு தொழில் நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று மூலப் பொருட்களின் விலையை குறைத்துள்ளது. அரசியல் ஆதயாத்திற்காக கூட்டாட்சி தத்துவம் குறித்து மாநில அரசு தவறாக, பொதுமக்களிடம் பொய் பிரச்சாரம் செய்யக் கூடாது. தனிப்பட்ட ஆதாயத்திற்காக மோடி அரசை, தமிழக அரசு எதிர்க்கிறது. கொரோனாவல் தொழில் முடங்கினாலும் வரி வருவாயை அதிகரித்து மாநில அரசுக்கான நிதியை, மத்திய அரசு வழங்கி வருகிறது.

சென்னையில் பாஜக பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் தமிழகத்தின் சட்டம், ஒழுங்கு கேள்விக் குறியாகி உள்ளதையே காட்டுகிறது. அதேபோல் யாருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. குறிப்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிரான மிரட்டல் அதிகரித்து வருகிறது. திமுகவின் சமூக நீதி சட்டம் வார்த்தையில் இல்லாமல் செயலில் இருக்க வேண்டும். ஆட்சிக்கு வந்த ஓராண்டில் ஊடகங்களை மிரட்டி பணிய வைக்க வேண்டும் என்கிற போக்கு தற்போது திமுகவிற்கு வந்துள்ளது. ஏன் திமுகவிற்கு வாக்களித்தோம் என மக்கள் நினைக்கிறார்கள். இவ்வாறு வானதி சீனிவாசன் தெரிவித்தார்.