பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்த அரசாணை: டிடிவி தினகரன் கண்டனம்!

சென்னை 2-வது விமான நிலையத்தை காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் அமைப்பதற்காக நிலத்தை கையகப்படுத்துவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டது. இந்த அரசாணைக்கு எதிராக உடனடியாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை விமான நிலையம் போலவே பரந்தூரில் 2-வது விமான நிலையம் அமைய உள்ளது. இதற்காக பரந்தூர் மற்றும் அதனை சுற்றிய 20 கிராமங்களில் சுமார் 5746 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்கு பரந்தூர் சுற்று வட்டார மக்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏகனாபுரத்தில் இந்தப் போராட்டம் நாள்தோறும் நடைபெறுகிறது. அதேபோல பரந்தூர் சுற்று வட்டார கிராம சபை கூட்டங்களிலும் விமான நிலையத்துக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தப் பின்னணியில் பரந்தூர் விமான நிலையத்துக்கு நிலங்களை கையகப்படுத்த ஒப்புதல் அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு. பரந்தூரை சுற்றிய 20 கிராமங்களில் 5746 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்காக ரூ19.24 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு அரசின் இந்த அரசாணை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பரந்தூர் சுற்றுவட்டார விவசாயிகளை கொந்தளிக்க வைத்துள்ளது. மேலும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டும் விவசாயிகள் தர்ணா போராட்டம் நடத்தினர். இதனால் விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

தமிழ்நாடு அரசின் இந்த அரசாணைக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தினகரன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

பரந்தூர் பசுமை விமானநிலையம் அமைக்கும் பணிக்காக விவசாயிகளின் போராட்டத்திற்கு செவி சாய்க்காமல் விளைநிலங்களை கையகப்படுத்த அரசு பிறப்பித்திருத்திருக்கும் உத்தரவு கடும் கண்டனத்திற்குரியது. காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமையவுள்ள சென்னையின் இரண்டாவது விமான நிலையத்தால் பரந்தூர், வளத்தூர், தண்டலம், ஏகனாபுரம், எடையார்பாக்கம், அக்கம்மாபுரம், உள்ளிட்ட 13 கிராமங்களைச் உள்ளடக்கிய பகுதிகளில் விளைநிலங்கள் மற்றும் முக்கியமான நீர் நிலைகள் பாதிக்கப்படும் என்பதால் அப்பகுதி பொதுமக்களும் விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் அவர்களின் கோரிக்கைகளுக்கு மாறாக, நிலம் கையகப்படுத்துவதற்கான நிர்வாக அனுமதியை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது.

பல்வேறு விதமான போராட்டங்கள் மூலமாக தங்களின் எதிர்ப்பை அறவழியில் பதிவு செய்துவரும் விவசாயிகளை கைது செய்து அடக்குமுறையை கையாள்வதும், பொதுமக்கள் ஒன்று கூடி கிராமசபை கூட்டத்தில் நிறைவேற்றி அனுப்பி வைத்த தீர்மானத்தை புறக்கணிப்பதும் அரசின் மக்கள் விரோதப் போக்கையே வெளிக்காட்டுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், விமான நிலையம் அமைய உள்ள இடத்தையும், நீர் நிலைகள் பாதிப்பு குறித்து ஆய்வு செய்த தொழில்நுட்பக் குழுவின் அறிக்கை கூட வெளியாகாத நிலையில், அவசரகதியில் நிலத்தை கையகப்படுத்துவது ஏன் ? என அப்பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் கேள்வி எழுப்புகின்றனர்.

எனவே, தமிழக அரசு தனது விடாப்பிடி தனத்தை கைவிட்டு, விளைநிலங்கள், ஏரி, குளங்கள், குடியிருப்புகளை அழித்து விமான நிலையம் தேவையில்லை என்ற முழக்கத்தை முன்னிறுத்தி ஓராண்டுக்கும் மேலாக போராடி வரும் விவசாயிகளை நேரில் சந்தித்து அவர்களின் வாழ்வாதார பிரச்னையை காது கொடுத்து கேட்பதோடு, விவசாயிகளின் அனுமதியின்றி அவர்களின் நிலத்தை கையகப்படுத்த பிறப்பித்த அரசின் உத்தரவை உடனடியாக திரும்ப பெற வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு டிடிவி தினகரன் கூறியுள்ளார்.