கார்த்தி அமைதியா இருக்க கூடாது: அமீருக்கு ஆதரவாக களமிறங்கிய சமுத்திரக்கனி!

17 வருடங்களுக்கு பிறகு பருத்திவீரன் படத்தின் பிரச்சனை மீண்டும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இயக்குனர் அமீர் மீது குற்றம்சாட்ட பதிலுக்கு அமீர் தன் பக்கம் இருக்கும் நியாயங்களை கூறினார். இதைத்தொடர்ந்து அமீருக்கு ஆதரவாக சசிகுமார் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் களமிறங்கியுள்ளனர். தற்போது இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி அமீருக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளார்.

இன்று தமிழ் சினிமாவில் 25 படங்களுக்கு மேல் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் கார்த்தி. இவரின் இந்த வெற்றி பயணத்திற்கு அஸ்திவாரம் போட்டது தான் அமீர் இயக்கத்தில் வெளிவந்த பருத்திவீரன் திரைப்படம். இப்படம் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. கார்த்திக்கு ஒரு நடிகராக அடையாளத்தையும் கொடுத்தது. ஆனால் இப்படத்தின் போது அமீர் மற்றும் தயாரிப்பு நிறுவனம் இடையே மோதல் வெடித்தது. இந்த மோதல் வழக்கு வரை சென்றது. இந்நிலையில் சமீபத்தில் கார்த்தியின் 25 ஆவது படமான ஜப்பான் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குனர் அமீர் பங்கேற்கவில்லை. கார்த்தியை வைத்து படமெடுத்த அனைத்து இயக்குனர்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க அமீர் மட்டும் கலந்துகொள்ளவில்லை. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தனக்கு அழைப்பு விடுக்கவில்லை என அமீர் கூறவே இந்த பிரச்சனை மீண்டும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் அமீர் ஒரு பேட்டியில் பருத்திவீரன் படத்தின் பிரச்னையை பற்றி பேச அதைத்தொடர்ந்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவும் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தார். அந்த பேட்டியில் அமீர் தன்னை ஏமாற்றிவிட்டது போல பேசினார் ஞானவேல் ராஜா. இதையடுத்து அமீர் தன் பக்க நியாயத்தை அறிக்கையாக வெளியிட்டார். இது ஒருபக்கம் இருக்க அப்படத்தில் அமீருடன் இணைந்து பணியாற்றிய சமுத்திரக்கனி மற்றும் சசிகுமார் ஆகியோர் அமீருக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளனர்.

நேற்று சசிகுமார் தன் ஆதரவை அமீருக்கு தெரிவிக்க தற்போது சமுத்திரக்கனியும் அமீருக்கு ஆதரவாக பேசியுள்ளார். அவர் கூறுகையில், இந்த படத்தில் அமீருடன் ஆரம்பத்தில் இருந்தே பணியாற்றியுளேன் எனவும், இப்படத்திற்காக அமீர் படாத கஷ்டம் இல்லை எனவும் பேசியுள்ளார் சமுத்திரக்கனி. இதுபோன்ற பொய்யான குற்றச்சாட்டுகளை சொல்வதை ஞானவேல் ராஜா தவிர்க்கவேண்டும் என கூறிய சமுத்திரக்கனி படப்பிடிப்பு தளத்தில் நேரடியாக இருந்த கார்த்தி அமைதியாக தற்போது இருப்பது என்னால ஏற்றுக்கொள்ள முடியல என வெளிப்படையாக பல விஷயங்களை பேசியுள்ளார் சமுத்திரக்கனி என்பது குறிப்பிடத்தக்கது.