விஜயகாந்த் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்: மருத்துவமனை தகவல்!

விஜயகாந்த் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்த நிலையில் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவு காரணமாக வீட்டில் இருந்தபடியே சிகிச்சை எடுத்து வருகிறார். அவ்வப்போது வெளிநாடு சென்றும் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு வருகிறார். இதன் காரணமாக பொதுவெளியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை குறைத்துக்கொண்டுவிட்டார். தேமுதிக கட்சிக் கூட்டங்களில் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்தே பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில் கடந்த 18ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மார்புச் சளி, இடைவிடாத இருமல் காரணமாக விஜயகாந்த், சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே பல்வேறு உடல் உபாதைகள் இருப்பதால் உடல்நிலை மற்றும் உறுப்புகளின் செயல்பாட்டை துல்லியமாக கண்காணிப்பதற்காக ஐசியூவில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், விஜயகாந்த் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக, அவருக்கு சிகிச்சை அளித்து வரும் தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும், செயற்கை சுவாச சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், செயற்கை சுவாசக் கருவி அகற்றப்பட்டு, அவர் இயற்கையாக சுவாசிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, விஜயகாந்த் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்னும் ஓரிரு நாட்களில் விஜயகாந்த் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இச்செய்தி தேமுதிக தொண்டர்களுக்கு நிம்மதி அளித்துள்ளது.