டிசம்பர் 2-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு!

நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத் தொடர் வரும் டிசம்பர் 4ம் தேதி கூட உள்ள நிலையில், டிசம்பர் 2-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் கடைசி கூட்டத் தொடர் டிசம்பர் 4 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கடந்த 9 ஆம் தேதி அறிவித்தார். வழக்கமாக நாடாளுமன்றக் கூட்டத் தொடர் கூடுவதற்கு ஒரு நாள் முன்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்படும். ஆனால், டிசம்பர் 3 ஆம் தேதி 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளதால், இம்முறை ஒரு நாள் முன்னதாகவே அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் இந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு, ஐபிசி, சிஆர்பிசி, ஆவணச் சட்டம் ஆகியவற்றுக்கு மாற்றாக மூன்று புதிய சட்டங்களை மத்திய அரசு இந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேற்ற முயலும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு, திரிணாமூல் காங்கிரஸ் எம்பி மஹூவா மொய்த்ரா, தொழிலதிபர் ஹிராநந்தானியிடம் பணம் பெற்றுக்கொண்டு அவர் விரும்பிய கேள்விகளை நாடாளுமன்றத்தில் எழுப்பிய விவகாரம் குறித்து நாடாளுமன்ற நெறிமுறைக் குழு விசாரித்து அளித்த அறிக்கை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.