இலங்கையில் இருந்து 7 அகதிகள் தனுஷ்கோடிக்கு வருகை!

இலங்கையில் இருந்து தனுஷ் கோடிக்கு அகதிகளாக வந்திறங்கிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர், மண்டபம் முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக, கடந்த 2022 முதல் ஏராளமானோர் இந்தியாவுக்கு அகதிகளாக வந்த வண்ணம் உள்ளனர். இதுவரை 275 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடிக்கு வந்துள்ளனர்.

இந்நிலையில், இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் சுழிபுரத்தைச் சேர்ந்த நாகராசா (43), இவரது மனைவி வணிந்தினி (38), மகன்கள் அஜந்தன் (18), அனோஜன் (13), கஜீவன் (9), மகள்கள் கிசாலினி (17), தனுஷிகா (4) ஆகிய 7 பேரும், இலங்கை தலைமன்னார் கடற்கரையில் இருந்து ஃபைபர் படகு மூலம் தனுஷ்கோடி அரிச்சல் முனை பகுதிக்கு நேற்று அதிகாலை வந்து இறங்கி உள்ளனர்.

தகவலறிந்து அரிச்சல்முனை கடற்கரைக்கு சென்ற மரைன் போலீஸார், இவர்கள் 7 பேரையும் மண்டபம் மரைன் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். விசாரணைக்கு பின்னர், 7 பேரையும் மண்டபத்தில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்கவைத்தனர். இவர்களுடன், தமிழகத்துக்கு வந்துள்ள இலங்கை அகதிகளின் எண்ணிக்கை 282 ஆக உயர்ந்துள்ளது.