யாராவது தயவுசெய்து எனது கையை பிடித்து கொள்ள முடியுமா?: மாளவிகா மோகனன்

நான் டப்பிங் பேசும் போது யாராவது தயவுசெய்து எனது கையை பிடித்து கொள்ள முடியுமா? என்று மாளவிகா மோகனன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக சமூக அக்கறை கொண்ட படங்களை இயக்கி வரும் பா. ரஞ்சித்தும், நடிப்பு அரக்கனான விக்ரமும் முதன்முறையாக கூட்டணி அமைத்துள்ள படம் ‘தங்கலான்’. கோலிவுட் சினிமாவே மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் படமாக உருவாகியுள்ள தங்கலானை ஹாலிவுட் தரத்தில் இயக்கியுள்ளார் பா. ரஞ்சித். தன்னுடைய படங்கள் அனைத்திலும் ஏதோவொரு சமூக பிரச்சனை குறித்து தொடர்ச்சியாக பேசி வருகிறார் பா. ரஞ்சித். கடைசியாக இவரது இயக்கத்தில் வெளியான ‘நட்சத்திரம் நகர்கிறது’ படம் கூட தற்கால காதலின் பல கோணங்களை அணுகி இருந்தது. இதனையடுத்து தற்போது கேஜிஎப் குறித்த உண்மை வரலாற்றினை பேசும் விதமாக தங்கலானை இயக்கி வருகிறார்.

விக்ரம், பா. ரஞ்சித் இருவர் கெரியரிலும் இதுவரை இல்லாத அளவிற்கு பெரும் பொருட் செலவில் இப்படம் உருவாகியுள்ளது. ‘தங்கலான்’ படத்தில் விக்ரமுடன் பசுபதி, மாளவிகா மோகனன், பார்வதி திருவோத்து உள்ளிட்டோர் இணைந்து நடித்து வருகின்றனர். ரஜினி, விஜய்யுடன் இணைந்து நடித்தாலும் இன்னமும் தமிழ் சினிமாவில் பெரிய பிரேக் கிடைக்காமல் இருக்கும் மாளவிகா மோகனனுக்கு ‘தங்கலான்’ படம் மிகப்பெரிய திருப்பத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ‘தங்கலான்’ படம் குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார் நடிகை மாளவிகா மோகனன். அதில், ‘எனக்கு பட உருவாக்கத்தின் பயங்கரமான பகுதி டப்பிங் தான். நான் டப்பிங் பேசும் போது யாராவது தயவுசெய்து எனது கையை பிடித்து கொள்ள முடியுமா? என பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.