தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் மக்களை தந்திரமாக ஏமாற்றும் திமுக: வானதி சீனிவாசன்

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் திமுக அரசு மக்களை ஏமாற்றுவதாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.

அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யும் பெண்களிடம், சாதி, வயது மற்றும் கல்வித் தகுதி குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. ஏற்கனவே அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவித்த திமுக, தற்போது தகுதி அடிப்பமையில் உரிமைத் தொகை வழங்கி வருவதாக குற்றம்சாட்டும் எதிர்க்கட்சிகள், அரசுப் பேருந்துகளில் மகளிருக்கான இலவச பயணத்தை ரத்து செய்யவே இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுவதாக கூறி வருகின்றன.

இந்நிலையில் பாஜக மூத்த நிர்வாகியும் அக்கட்சியின் எம்எல்ஏவுமான வானதி சீனிவாசனும் அதே குற்றச்சாட்டுக்களை முன் வைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:-

குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ. 1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் வாக்குறுதி அளித்து திமுக ஆட்சியைப் பிடித்தது என்றும் ஆனால், ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகளாக உரிமைத் தொகை வழங்காமல் ஏமாற்றி வந்தது என்றும் டசாடியுள்ளார்.

மக்களவைத் தேர்தல் வருகிறது என்றதும் கடந்த மூன்று மாதங்களாக ரூ. 1,000 வழங்கப்படுவதாக கூறியுள்ள வானதி சீனிவாசன், தேர்தல் வாக்குறுதிப்படி, அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் உரிமைத் தொகை வழங்காமல், திமுக அரசு மறுத்து விட்டது என்றும் குற்றம்சாட்டியுள்ளார். தற்போது அரசுப் போக்குவரத்துக்கழக நகர பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யும் பெண்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் வேலையை தந்திரமாக தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

நகர பேருந்துகள் அனைத்திலும் பெண்களுக்கு இலவச பயணம் என, சட்டமன்றத் தேர்தலில் வாக்குறுதி அளித்துவிட்டு, சாதாரண கட்டண பேருந்துகளில் மட்டும் இலவச பயணத்தை அனுமதித்துள்ளது என்றும் அதிலும் பெண் பயனாளின் எண்ணிக்கையைக் குறைக்க, இலவச பயணம் செய்யும் பெண்களிடம் மதம், ஜாதி, கல்வித் தகுதி, வேலை உள்ளிட்ட 15 வகையான விவரங்களை திமுக அரசு சேகரித்து வருகிறது என்றும் சாடியுள்ளார். பெண்கள் இலவசமாக பயணம் செய்வதற்கு வேட்டு வைக்கவே, வெளிப்படையாக அறிவிக்காமல் கணக்கெடுப்பு நடத்தி வருகிறார்கள் என்றும் வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் மக்களை தந்திரமாக ஏமாற்றி வரும் திமுகவுக்கு வரும் மக்களவைத் தேர்தலில் தமிழக மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்றும் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். திமுக அரசு சட்டமன்றத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் அனைத்து நகரப் பேருந்துகளிலும் பெண்கள் இலவசப் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் எனறும் மக்கள் தொகைக்கு ஏற்ப நகரப் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.