என் வாழ்க்கைக்கு வந்து, என்னை நேசிக்க வைத்ததற்கு நன்றி: அபர்ணா தாஸ்

தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார் நடிகை அபர்ணாதாஸ். சமூக வலைத்தளங்களில் ஜாலியான போட்டோஸ் மற்றும் வீடியோ பகிர்ந்து வரும் இந்த நடிகை, திடீரென ஒரு வீடியோவை பகிர்ந்து உருக்கமான கேப்ஷனை பதிவிட்டிருக்கிறார்.

2018 ந்ஞான் பிரகாசம் என்னும் மலையாள படத்தில் நடித்து சினிமாவில் என்ட்ரி கொடுத்தார் நடிகை அபர்ணா தாஸ். அதன் பிறகு சில மலையாள படங்களிலும் சில தமிழ் படங்களிலும் நடித்திருக்கிறார். இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் அபர்ணா தாஸ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இயக்குனர் கணேஷ்.கே.பாபு இயக்கத்தில் கவினுக்கு ஜோடியாக இவர் நடித்த டாடா திரைப்படம் தமிழ் சினிமாவில் இவருக்கு மிகப்பெரிய ஓபனிங்கை ஏற்படுத்திக் கொடுத்தது. இப்போது மலையாளம் மற்றும் தமிழில் சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர் டிக் டாக் வீடியோ பதிவிட்டு அதன் மூலம் சினிமாவில் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் தளம் என அனைத்து சமூக வலைத்தளங்களிலும் அவ்வப்போது போட்டோஸ் வீடியோஸ் என பதிவிட்டு வரும் இந்த நடிகை இப்போது ஒரு வீடியோவை பகிர்ந்து அதில் உருக்கமான கேப்ஷனை பதிவிட்டு இருக்கிறார்.

மலையாள சினிமாவில் மிகவும் முக்கிய, மூத்த மற்றும் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை சுபலக்ஷ்மி. இவர் மலையாளம் மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னடா, இந்தி ஆகிய மொழிகளிலும் படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்திருக்கிறார். 87 வயதான நடிகை சுபலக்ஷ்மி நேற்று முன்தினம் இரவு வயது மூப்பு காரணமாக காலமானார். இவரின் இறப்புக்கு மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகினர் அஞ்சலி செலுத்து வருகின்றனர். மேலும் மலையாளத்தில் கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட படங்களிலும் 60-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்த இவர் பல விளம்பர படங்களிலும் நடித்திருக்கிறார்.

தமிழில் விண்ணைத்தாண்டி வருவாயா, பீஸ்ட், அம்மணி போன்ற படங்களில் நடித்திருக்கும் மூத்த நடிகை சுபலக்ஷ்மி படப்பிடிப்பின் போது ஆடிய நடன வீடியோவை பகிர்ந்திருக்கிறார் நடிகை அபர்ணா தாஸ். அந்த பதிவின் கேப்ஷனாக, “இந்த வீடியோவை இப்போது போஸ்ட் செய்ய வேண்டும் என தோன்றியது.. நேற்று உங்களைக் குறித்து செய்தி வரும் வரையில் உங்கள் மீது இவ்வளவு அன்பு எனக்கு இருக்கிறது என்பது எனக்கே தெரியவில்லை. தனது கடைசி நாள் வரை வேலை செய்ய வேண்டும் என நினைத்த ஒரு வலிமையான பெண் இவர். கடைசியாக நாங்கள் பேசியபோது சீக்கிரமாக உடலை சரி செய்து கொண்டு வேலைக்கு திரும்புவதாக அவர் கூறியிருந்தார். அவரது 87 வயது வரை அவர் வேலை செய்துவந்தார். கொஞ்சமும் சோர்வடையவில்லை. இது அவருக்கான ஓய்வெடுக்கும் நேரமாக அமைந்திருக்கிறது. என் வாழ்க்கைக்கு வந்து என்னை நேசிக்க வைத்ததற்கு மிகவும் நன்றி. அவருக்காக பிரார்த்தனை செய்கிறேன். மீண்டும் அவரது குரலை கேட்க காத்திருக்கிறேன்..” என உருக்கமான கேப்ஷனை பதிவிட்டு இருக்கிறார் நடிகை அபர்ணா தாஸ்.