தலைவர் 170 பட சூட்டிங் ஸ்பாட்டில் கையில் காயமடைந்த ரித்திகாசிங்!

நடிகர் ரஜினிகாந்தின் தலைவர் 170 படத்தின் சூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் சூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட விபத்தில் கையில் காயம் ஏற்பட்டுள்ளதாக ரித்திகா சிங் தற்போது சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக தன்னுடைய மகள் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் பொங்கல் ரிலீசாக வெளியாகவுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், படத்தின் பிரமோஷன்களை விரைவில் துவங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் தன்னுடைய தலைவர் 170 படத்திற்காக டிஜே ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் இணைந்துள்ளார். கடந்த சில வாரங்களாக இந்தப் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படத்தில் நடிகை ரித்திகா சிங் லீட் கேரக்டரில் நடித்து வருகிறார். படத்தில் அவருக்கு ஆக்ஷன் காட்சிகளும் உள்ளதாக முன்னதாக படக்குழு சார்பில் கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது சூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட விபத்து காரணமாக அவருக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளதாக சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். மேலும் werewolfஉடன் சண்டையிட்டது போல தன்னுடைய காயங்கள் காணப்படுவதாகவும் தன்னுடைய பதிவில் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக சூட்டிங் ஸ்பாட்டில் கண்ணாடி இருப்பதாக படக்குழுவினர் தன்னை எச்சரித்துக் கொண்டே இருந்தனர். ஆனாலும் சில நேரங்களில் இதுபோல நடப்பதை தவிர்க்க முடியாது என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த விபத்தினால் தான் மிகவும் அப்செட்டாகியுள்ளதாவும் தெரிவித்துள்ளார். ஆனால் வலி அதிகமாக இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய கவனக்குறைவால்தான் இந்த விபத்து நிகழ்ந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.