சென்னையில் ஹெலிகாப்டர் மூலம் உணவு விநியோகம்!

மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக சென்னையில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், விமானப்படை ஹெலிகாப்டர்கள் மூலமாக உணவு விநியோகம் செய்யும் பணி தொடங்கியுள்ளது. இதனால் உணவுப் பொட்டலங்களை வாங்க மக்கள் வீட்டின் மொட்டை மாடிகளில் காத்திருக்கின்றனர்.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட் வட தமிழக மாவட்டங்களை அடித்து நொறுக்கிவிட்டு சென்றிருக்கிறது மிக்ஜாம் புயல். இதனால் மேற்குறிப்பிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. சென்னையில் மட்டும் இதுவரை 12-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர். வடபழனி, ராயப்பேட்டை, ஊரப்பாக்கம், துறைமுகம், எண்ணூர், வியாசர்பாடி, சைதாப்பேட்டை, சூளைமேடு, கோடம்பாக்கம், வேளச்சேரி, பெருங்குடி, ஆதம்பாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. அங்குள்ள வீடுகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்துள்ளதால் மக்கள் மொட்டை மாடிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில், வீடுகளுக்குள் வர முடியாததால் அவர்கள் உணவு, தண்ணீர் இன்றி தவித்து வருகிறார். மேலும், பல இடங்களில் இன்னமும் மின்சாரம் இல்லாததால் மக்கள் கடும் அவஸ்தையை சந்தித்து வருகின்றனர். இந்த சூழலில், தமிழக அரசு கேட்டுக்கொண்டதன் பேரில், இந்திய விமானப் படை ஹெலிகாப்டர்கள் தற்போது களத்தில் இறங்கியுள்ளன. தற்போது அடையாறு, துறைமுகம் போன்ற வெள்ளத்தால் அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் விமானப் படை ஹெலிகாப்டர்கள் மூலம் உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டன.

மொட்டை மாடிகளிலும், காலி மைதானங்களிலும் இந்த உணவுப் பொட்டலங்கள் தூக்கி வீசப்படுகின்றன. வெள்ளம் சூழ்ந்துள்ளதால் உணவு இன்றி தவிக்கும் மக்களுக்கு இந்த உணவுப் பொட்டலங்கள் பேருதவியாக இருக்கும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் மற்ற பகுதிகளிலும் ஹெலிகாப்டர்கள் மூலம் உணவு விநியோகம் நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.