3 நாளாக உணவின்றி தவித்த நடிகை நமீதா: படகில் மீட்டனர்!

சென்னை பெருவெள்ளத்தில் சிக்கிய நடிகை நமீதா, அவரது கணவர், இரட்டை குழந்தைகளுடன் பத்திரமாக மீட்கப்பட்டார்.

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கனமழை காரணமாக சென்னையின் புறநகர் பகுதிகளில் மழைநீர் தேங்கியது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கியுள்ளவர்களை பேரிடர் மீட்பு குழுவினர், தீயணைப்புத் துறையினர், காவல் துறையினர் மீட்டு வருகிறார்கள். இந்த நிலையில் ஒரு நாளில் அடித்த பேய் மழையால் பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரி உடைந்து பள்ளிக்கரணை, துரைப்பாக்கம் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துவிட்டது. இந்த நிலையில் நடிகை நமீதாவும் துரைப்பாக்கத்தில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார், அவர் துரைப்பாக்கம் எக்ரட் பார்க் குடியிருப்பில் 6 அடி உயரத்திற்கு வெள்ளம் சூழ்ந்துவிட்டது. இந்த நிலையில் தனது இரட்டை குழந்தைகள், கணவருடன் வசித்து வந்த நமீதாவுக்கு அந்த பகுதியினர் உதவிகளை செய்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று காலை அந்த பகுதி திமுக வட்ட செயலாளர் ஆனந்த் பால், உணவு உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கி வந்தார். அப்போது நடிகை நமீதாவிற்கு நிவாரண பொருட்களை வழங்கினார். வேறு ஏதாவது உதவிகள் வேண்டுமா என நமீதாவிடம் கேட்டதற்கு இந்த இடத்தை விட்டு வெளியேறினால் போதும் என கூறியுள்ளார். இதையடுத்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினரிடம் ஆனந்த் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் படகில் வந்து நமீதா, அவருடைய கணவர், இரட்டை குழந்தைகள், நாய்க் குட்டிகளை மீட்டனர்.

இதுகுறித்து நடிகை நமீதா கூறுகையில், கடந்த 3 நாட்களாக அக்கம் பக்கத்தினர் உதவி செய்தனர். குழந்தைகள் இருப்பதால் எங்களால் அதே வீட்டில் வசிக்க முடியாத நிலை உள்ளது. எங்களை தவிர இங்கு குடியிருந்தவர்கள் அனைவரும் மீட்கப்பட்டுவிட்டனர். நாய்க் குட்டிகள் இருப்பதால் இங்கிருந்து வெளியேற முடியாத நிலை இருந்தது. ஹோட்டல்களில் செல்லப்பிராணிகளை அழைத்து செல்ல அனுமதிக்க வேண்டும். எங்கள் உறவினரின் வீட்டிற்கு செல்கிறோம். எங்களை மீட்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர், திமுக நிர்வாகி ஆனந்துக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.