ஓமந்தூரார் மருத்துவமனையிலிருந்து செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைப்பு!

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவர் இன்று காலை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி மீது வேலை வாங்கி கொடுக்க லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமலாக்கத் துறையினரால் கடந்த ஜூன் 14-ல் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜி, இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டார். உடல் நலம் தேறியதைடுத்து நீதிமன்ற காவலில் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி 120-க்கும் மேற்பட்ட பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிக்கை மற்றும் 3 ஆயிரம் பக்கங்களை கொண்ட ஆவணங்களை அமலாக்கத் துறையினர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அவரது ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இரு முறை தள்ளுபடி செய்த நிலையில், உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றமும் தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நேற்று முன் தினத்துடன் நிறைவடைந்த நிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி S.அல்லி முன்பு காணொலி காட்சி மூலமாக ஆஜர்படுத்தபட்டார். அப்போது செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை டிசம்பர் 15 ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதன்படி, அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் இதோடு 12-வது முறையாக நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே செந்தில் பாலாஜிக்கு வாந்தி, மயக்கம் காரணமாக அவர் நவம்பர் 12 ஆம் தேதி சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மேல்சிகிச்சைக்காக ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அறிவுறுத்தினர். இதையடுத்து அங்கு அழைத்து செல்லப்பட்ட செந்தில் பாலாஜிக்கு இதயவியல் துறை, நரம்பியல் துறை உள்ளிட்டோர் சிகிச்சை அளித்தனர். அவருக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்கப்பட்டதில் அவருடைய மூளைக்கு செல்லும் நரம்பில் ரத்தக் கட்டி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த ரத்தக் கட்டிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் செந்தில் பாலாஜி இன்று காலை 6.30 மணிக்கு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதையடுத்து அவர் மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.