வெள்ளத்தில் தவிக்கும் குடும்பங்களுக்கு நிதியுதவி செய்த நடிகர் பாலா!

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி தவித்து வரும் குடும்பங்களுக்கு நேரில் சென்று நடிகர் பாலா நிதி உதவி அளித்துள்ளார்

சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் நடிகர் பாலா. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘கலக்கப் போவது யாரு’, ‘குக் வித் கோமாளி’ உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் மூலம் பார்வையாளர்கள் மத்தியில் பிரபலமானார். ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இதுதவிர தொடர்ந்து இவர் எளிய மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்துவருகிறார். தனது சொந்த செலவில் இலவச ஆம்புலன்ஸ்களையும் வழங்கி வருகிறார்.

இந்த நிலையில், சென்னையில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி தவித்து வரும் குடும்பங்களுக்கு நேரில் சென்று நடிகர் பாலா பண உதவி அளித்துள்ளார். பல்லாவரம், அனகாபுத்தூர், பம்மல் ஆகிய பகுதிகளில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 200 குடும்பங்களுக்கு தலா ரூ.1000 வழங்கியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “என்னை வாழவைத்த சென்னைக்கு என்னால் முடிந்த உதவி இது. 2015-ல் வெள்ளம் வந்தபோது உதவி செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் அப்போது என்னிடம் பணம் இல்லை. அதனால்தான் இப்போது என் கணக்கில் இருந்த சுமார் ரூ.2.15 லட்சத்தை எடுத்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ.1000 கொடுத்து இருக்கிறேன்” என்றார்.

இலவச ஆம்புலன்ஸ், ஏழை குழந்தைகளின் படிப்பு செலவு, ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உதவி ஆகியவற்றுடன் பாலா செய்துள்ள இந்த செயல் சமூக வலைதளங்களில் பலரது பாராட்டை பெற்றுள்ளது.