என்னை மோடிஜி என்று அழைக்க வேண்டாம்: பிரதமர் மோடி!

மோடிஜி என கூறி தன்னை வேறுபடுத்திப் பார்க்க வேண்டாம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

ராஜஸ்தான், சத்தீஷ்கார், மத்தியப் பிரதேச மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றதை அடுத்து, கட்சியின் எம்பிகள் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி வந்தபோது, அனைவரும் எழுந்து நின்று கைகளைத் தட்டி வரவேற்பு அளித்தனர். மோடிஜியால் கட்சி மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளதாக அப்போது கோஷம் எழுப்பப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது:-

மிக்ஜம் புயலால் உயிரிழந்தவர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாஜகவினர் அனைவரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். தேர்தல் முடிவுகள் சிறப்பாக இருந்தது. மிசோரமிலும் நம் பலம் இரட்டிப்பாகியது. தெலுங்கானாவில் நமது பலம் பன்மடங்கு அதிகரித்துள்ளது. மத்தியில் பா.ஜ.க. நன்றாக உள்ளது. ஆனால் மாநில அளவில் பலம் இல்லை என்று பரப்பப்படும் வதந்தி தவறானது.

தொடர்ந்து 2 முறை ஆட்சியில் இருந்த காங்கிரஸ் பின்னர் தேர்தலைச் சந்திக்கும் வாய்ப்பு வந்தது.
காங்கிரசுக்கு 7 முறை இந்த வாய்ப்பு கிடைத்து. ஒரே ஒரு முறைதான் 3-வது முறையாக நுழைய முடிந்தது. தொடர்ந்து 2 முறை ஆட்சியில் இருந்த பா.ஜ.க. 17 முறை தேர்தலைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றது. 10 முறை பா.ஜ.க. வெற்றி பெற்றது. குஜராத் போன்ற மாநிலத்தை 7 முறை வென்றுள்ளோம். எம்.பி. தேர்தலிலும் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறோம்.

பா.ஜ.க.வின் ஆட்சி முடிவெடுப்பது மற்றும் வெளிப்படைத் தன்மை போன்றவற்றை மக்கள் விரும்புகிறார்கள். ஒரு அரசாங்கமாக எங்களிடம் நேர்மறையான எண்ணம் இருப்பது பெரிய விஷயம். எங்கள் கட்சியில் பதவிக்கு எதிரான நிலை இல்லை. இத்தேர்தலில் கிடைத்த வெற்றி எமது கூட்டு பலத்தின் வெற்றியாகும். ஒவ்வொரு பா.ஜ.க. தொண்டரும் இந்த வெற்றிக்கு தகுதியானவர்கள். கட்சியை கட்டியெழுப்புவதில் தங்கள் வாழ்நாளை செலவிட்டவர்களும் இந்த வெற்றிக்கு தகுதியானவர்கள்.

இந்த வெற்றி தனி நபரின் வெற்றி அல்ல, கட்சியினரின் கூட்டு முயற்சிக்குக் கிடைத்த வெற்றி. மேலும், மோடிஜி என கூறி தன்னை வேறுபடுத்திப் பார்க்க வேண்டாம். நான் மோடி மட்டுமே.தொடர்ந்து கூட்டு முயற்சியுடன் கட்சி முன்னோக்கி பயணிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.