கேசிஆர் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக பிரதமர் மோடி டுவீட்!

தெலங்கானா முன்னாள் முதல்வரும், பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியின் தலைவருமான கே.சந்திரசேகர ராவ் கால் தவறி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவர் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தெலங்கானா முன்னாள் முதல்வரும், பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியின் தலைவருமான கே.சந்திரசேகர ராவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏரவல்லியில் அவரது பண்ணை வீட்டில் தங்கியிருந்த கேசிஆர் நேற்றிரவு கீழே விழுந்ததாகத் தெரிகிறது. இதனையடுத்து அவர் ஹைதராபாத் யசோதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதில் அவருக்கு இடுப்பில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில், கே.சி.ஆரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவருக்கு இடது இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை (left hip replacement )செய்ய வேண்டும் என்றும், இது ஆறு முதல் எட்டு வாரங்களில் குணமடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் மருத்துவமனை அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, இது குறித்து தனது எக்ஸ் தளத்தில், “தெலுங்கானா முன்னாள் முதல்வர் கே.சி.ஆர் காருவுக்கு காயம் ஏற்பட்டுள்ளதை அறிந்து மனவேதனை அடைந்தேன். அவர் விரைவில் குணமடைந்து நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க நான் பிரார்த்திக்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.