முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வைரமுத்து ரூ 1 லட்சம் நிதி!

சென்னை பெருவெள்ளம் பாதிப்பை அடுத்து முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ 1 லட்சம் வழங்குகிறேன் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

‘தண்ணீர் தண்ணீர் எங்கணும் தண்ணீர் குடிக்கத்தான் இல்லை ஒருதுளி’ எனும் ஆங்கிலக் கவிதை நினைவின் இடுக்கில் கசிகிறது

வீட்டுக்குத் தண்ணீர் இல்லை என்பது சிறுதுயரம்.. வீட்டுக்குள்ளேயே தண்ணீர் என்பது பெருந்துயரம்..
விடியும் வடியும் என்று காத்திருந்த பெருமக்களின் துயரத்தில் பாதிக்கப்படாத நானும் பங்கேற்கிறேன்..
என் கடமையின் அடையாளமாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு லட்ச ரூபாய் வழங்குகிறேன்.. பொருள்கொண்டோர் அருள்கூர்க சக மனிதனின் துயரம் நம் துயரம்
இடர் தொடராதிருக்க இனியொரு விதிசெய்வோம்; அதை எந்தநாளும் காப்போம். இவ்வாறு வைரமுத்து தெரிவித்துள்ளார்.