மாயாவதி தனது அரசியல் வாரிசாக ஆகாஷ் ஆனந்தை அறிவித்தார்!

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் (பிஎஸ்பி) மாயாவதி தனது மருமகன் ஆகாஷ் ஆனந்தை அடுத்த அரசியல் வாரிசாக அறிவித்துள்ளார். வரும் மக்களவைத் தேர்தலுக்கு கட்சி தயாராவது குறித்து ஆராய்வதற்காக மாயாவதி தலைமையில் இன்று நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் இதனை அவர் அறிவித்தார்.

கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது பகுஜன் சமாஜ் கட்சியின் முக்கிய முகமாக அறியப்பட்ட ஆகாஷ் ஆனந்த், கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக ஆக்கப்பட்டார். வாரிசு அரசியலை தீவிரமாக எதிர்த்துப் பேசி வந்த மூத்த அரசியல்வாதியான மாயாவதி, கடந்த 2019ம் ஆண்டு தனது சகோதரர் ஆனந்த் குமாரை தேசியத் தலைவராகவும், மருமகன் ஆகாஷை தேசிய ஒருங்கிணைப்பாளராகவும் நியமித்தார்.

28 வயதாகும் ஆகாஷ் கடந்த 2019ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பாக அரசியலுக்குள் நுழைந்தார். அதற்கு முன் 2017ம் ஆண்டு நடைபெற்ற உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலிலும், கட்சி நிகழ்ச்சிகளிலும் தனது அத்தையுடன் இணைந்து காணப்பட்டார். இந்த நிலையில் அவர் மாயாவதிக்கு அடுத்த இடத்தில் வைத்து பார்க்கப்படுகிறார்.

இதுகுறித்து பிஎஸ்பியைச் சேர்ந்த உதய்வீர் சிங் கூறுகையில், “பிஎஸ்பி தலைவர் மாயாவதி தனது அரசியல் வாரிசாக ஆகாஷ் ஆனந்தை அறிவித்துள்ளார். ஆகாஷ் ஆனந்த் கட்சியின் நிலையையும், கட்சி பலவீனமான இடங்களில் சரி செய்யும் பொறுப்புகளையும் கவனித்துக் கொள்வார். உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களில் கட்சியை மாயாவதியும், மற்ற மாநிலங்களில் ஆகாஷ் ஆனந்தும் வழிநடத்துவார்கள் எனத் மாயாவதி தெரிவித்தார்” என்று கூறினார்.