மா.சுப்பிரமணியனுடன் விவாதத்துக்கு நான் கண்டிப்பா வரேன்: சீமான்

சென்னை மழைநீர் வடிகால் பணிகள் தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் விடுத்த சவாலுக்கு சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.

வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல் ஆந்திர மாநிலத்தில் கரையைக் கடந்தாலும் சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் தனது கோரதாண்டவத்தை நிகழ்த்திவிட்டுச் சென்றுள்ளது. டிசம்பர் 4ஆம் தேதி காலை முதல் இரவு வரை கொட்டித் தீர்த்த மிக கனமழையின் காரணமாக சென்னையே வெள்ளக்காடாக மாறியது. வீடுகளுக்கு மழைநீர் புகுந்த நிலையில், மக்கள் சிறுக சிறுக வாங்கி சேகரித்த பொருட்கள் எல்லாம் சேதமடைந்தன. ஆயிரக்கணக்கான வாகனங்கள் பழுதடைந்துள்ளன. 6 வது நாளாக இடைவிடாது மீட்புப் பணிகள் நடைபெற்ற வண்ணம் உள்ள நிலையில், சென்னை இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாக தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா பேட்டியளித்துள்ளார்.

இதனிடையே எடப்பாடி பழனிசாமி, சீமான் உள்ளிட்டோர் சென்னை பெருவெள்ளம் தொடர்பாக திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்ததோடு, சென்னையில் வெள்ள வடிகால் பணிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.4,000 கோடி என்ன ஆனது என கேள்வி எழுப்பினர். இதுதொடர்பாக பதிலளித்துப் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “சென்னை மழைநீர் வடிகால் பணிகளுக்காக 4000 கோடி என்ன ஆனது என்று கேள்வி கேட்கும் எடப்பாடி பழனிசாமி, சீமான் உள்ளிட்டோருடன் ஒரே மேடையில் விவாதிக்கத் தயாராக உள்ளேன். நீங்கள் அனைவரும் ஒரு பக்கம் உட்காருங்கள். அரசின் பிரதிநிதியாக நான் ஒரு பக்கம் அமர்கிறேன். ரூ.4,000 கோடி எங்கே, எப்படி செலவு செய்யப்பட்டுள்ளது என்பதை அழைத்துச் சென்றே காட்டுகிறேன்” என்று அதிரடியாக அறிவித்தார்.

இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “அமைச்சர் மா.சுப்பிரமணியன் விடுத்த சவாலை நான் ஏற்கிறேன். அவரை நான் பெரிதாக மதிப்பேன், இப்போதும் மதிக்கிறேன். விவாதத்திற்கு எடப்பாடி பழனிசாமி வருகிறாரோ இல்லையோ நான் வருவதற்கு தயாராக இருக்கிறேன். திமுகதான் நிறைய ஊடகங்களை வைத்துள்ளது. அமைச்சர் மா.சுப்பிரமணியனே ஒரு நேரத்தைச் சொல்லட்டும், வருகிறேன். ஆனால், தொலைக்காட்சியில் நேரலையில் தான் விவாதிக்க வேண்டும்.

இப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் 5 ஆண்டு காலமும், மா.சுப்பிரமணியன் 5 ஆண்டு காலமும் சென்னை மேயராக இருந்துள்ளனர். அவர்களிடம் கேட்க என்னிடம் நிறைய கேள்விகள் உள்ளன. இப்போதைய இரண்டரை ஆண்டுகால ஆட்சியை விட்டுவிடுங்கள்.. இதற்கு முன்பு வடிகால் வசதிகளுக்காக திமுக செய்தது என்ன? ஸ்டாலின் மேயராக இருக்கும்போது வடிகால் பணிகளுக்கா எத்தனை ஆயிரம் கோடி ஒதுக்கினார்.. அதற்கான தெளிவான விளக்கத்துடன் வரட்டும். விவாதத்தில் பேசுவோம்” என்று சவால் விடுத்துள்ளார்.